பெங்களூரு கார்த்திக் கைது பீதியில் விழுங்கிய "அந்த" ஆபத்தான பொருள்.. 10 கிலோ வாழைப்பழம் தந்த போலீஸ்
பெங்களூரு: பெங்களூருவில் திருடிய சாவியை போலீஸாரிடம் சிக்காமல் இருக்க, சாவியை விழுங்கிய இளைஞர் ஒருவருக்கு, 10 கிலோ வாழைப்பழங்களை சாப்பிட கொடுத்து அந்த சாவியை டாக்டர்கள் மீட்டெடுத்தனர். விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞருக்கு, அறுவை சிகிச்சை ஏதுமின்றி இயற்கை முறையில் சாவியை வெளியேற்ற இந்த நூதன முறை கையாளப்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்தச் சாவி பத்திரமாக மீட்கப்பட்டதை அடுத்து, இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள். என்ன நடந்தது?
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (எ) ராமு (23), பெங்களூரு மாதநாயக்கனஹள்ளி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அழைத்துக்கொண்டு பல்லாரிக்கு சென்றுவிட்டததாக கூறப்படுகிறது. இது தொடர்பாகச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மாதநாயக்கனஹள்ளி போலீஸார் இருவரையும் மீட்டு பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர்.
பெங்களூரு கார்த்திக் விழுங்கிய லாக்கர் சாவி
போலீஸ் ஸ்டேஷனில் வைத்து போலீஸார் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். அப்போது தன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பாயுமோ என்று பயந்துபோன காரர்த்திக், கையில் இருந்த சிறிய லாக்கர் சாவியை திடீரென வாயில் போட்டு விழுங்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
10 கிலோ வாழைப்பழம்
அங்கு கார்த்திக்குக்கு முதற்கட்டமாக எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த எக்ஸ்ரே முடிவில், வாலிபரின் வயிற்று பகுதியில் ஒரு உலோக சாவி இருப்பது தெளிவாகத் தெரிந்தது. இரும்புச் சாவி என்பதால் அது குடல் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதை உடனடியாக வெளியே எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வழக்கமாக இத்தகைய சூழல்களில் அறுவை சிகிச்சை அல்லது எண்டோஸ்கோபி முறையிலேயே விழுங்கப்பட்ட பொருட்கள் வெளியே எடுக்கப்படும். ஆனால், இந்த கார்த்திக் விஷயத்தில் மருத்துவர்கள் ஒரு மாற்று முறையைப் பயன்படுத்த முடிவு செய்தனர். இதற்காகக் கார்த்திக்கிற்கு வாழைப்பழங்களைச் சாப்பிடக் கொடுக்குமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
உள் உறுப்புகள் காயமா
அதன்படி, போலீஸார் கார்த்திக்கிற்கு சுமார் 10 கிலோ வாழைப்பழங்களை சாப்பிட வைத்தனர். சுமார் 10 கிலோ பழங்களை சாப்பிட்டு முடித்த சில மணி நேரங்களில், அவருக்கு ஏற்பட்ட இயற்கை உபாதை மூலம் அவர் விழுங்கிய சாவி வெளியே வந்தது.
சாவியை மீட்டெடுத்த பிறகு இளைஞரின் உடல்நிலையை டாக்டர்கள் மீண்டும் ஒருமுறை முழுமையாகப் பரிசோதித்தனர்.. இளைஞரின் உள் உறுப்புகளில் அந்தச் சாவியினால் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படடு, அடுத்தகட்ட போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மீட்கப்பட்ட சாவியும் ஆதாரமாக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாய்ந்தது போச்சோ
விழுங்கிய உலோகப் பொருள் குடல் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்த பின்பே போலீஸார் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர். கார்த்திக்கை மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.. மேலும், சிறுமி கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கார்த்திக் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணையின் போது சாவியை விழுங்கிய இளைஞருக்கு 10 கிலோ வாழைப்பழங்கள் கொடுத்துச் சாவியை மீட்டெடுத்த இந்தச் சம்பவம் பெங்களூருவில் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications