பெட்ரோல் விலை ஏறிடுச்சா? கவலை வேண்டாம் - அதான் பஜ்ஜி எண்ணெய் இருக்கே! ராமர் பிள்ளைக்கே சவால்
பெங்களூரு: பஜ்ஜி உள்ளிட்ட பலகாரங்கள் சுடுவதற்காக பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை கொண்டு 9 ஆண்டுகளாக தனது காரை ஓட்டி வருகிறார் பெங்களூருவை சேர்ந்த 40 வயது நபர்.
கர்நாடகா தலைநகர் பெங்களூருவை சேர்ந்தவர் அவினாஷ் நாராயணசாமி. 40 வயதாகும் இவர் ஃபோர்டு பிகோ காரை கடந்த 9 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்.
எவ்வளவு விலை ஏறினாலும் வேறு வழியில்லை என்ற நிர்பந்தத்தின் காரணாமாக புலம்பிக்கொண்டே பைக், கார்களுக்கு பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களை நம்மில் பலர் நிரப்பிச் செல்கிறோம்.

டீசலான பஜ்ஜி எண்ணெய்
பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே அவற்றை தவிர்த்த அவினாஷ் நாராணசாமி, அதற்கு மாற்றாக பஜ்ஜி உள்ளிட்ட பலகாரங்களை சுடுவதற்காக பயன்படுத்தப்பட்ட பழைய எண்ணெய்யை தனது காருக்கு எரிபொருளாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறார். இதற்காக உணவகங்களில் குறைந்த விலையில் பழைய எண்ணெய்யை வாங்கி இருக்கிறார் அவினாஷ்.

எவ்வளவு செலவு?
அந்த எண்ணெய்யை பல்வேறு கட்டங்களில் சுத்திகரிப்பு செய்து அவர், அதன்மூலம் தனது காரை ஓட்டி வந்துள்ளார். இதுகுறித்து அவினாஷ் நாராயணசாமி தெரிவிக்கையில், "ஒரு லிட்டர் எண்ணெய் மூலமாக 700 லிருந்து 800 மில்லி லிட்டர் வரை எரிபொருளை எடுக்க முடியும். இதற்காக லிட்டருக்கு 60 லிருந்து 65 ரூபாய் மட்டுமே செலவாகிறது." என்றார்.

9 ஆண்டுகளாக நோ ப்ராப்ளம்
கடந்த 2013 ஆம் ஆண்டில் முதல் முறையாக தனது காருக்கு இந்த எண்ணெய்யை ஊற்றி பயன்படுத்தி இருக்கிறார் அவினாஷ். தொடர்ந்து எந்த பாதிப்பும், கோளாறும் ஏற்படாத காரணத்தால் இதையே வாடிக்கையாகிக் கொண்ட அவினாஷ் கடந்த 9 ஆண்டுகளாக இவ்வாறு காரை ஓட்டி வருகிறார். இதனால் காரின் எஞ்சினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையாம்.

மைலேஜ் எவ்வளவு?
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மூலமாக லிட்டருக்கு 15 லிருந்து 17 கிலோ மீட்டர் வரை காருக்கு மைலேஜ் கிடைப்பதாக கூறும் அவினாஷ், அனைத்து வகையான டீசல் கார்களிலும் இதனை தாராளமாக பயன்படுத்தலாம் என்கிறார். இது டீசலை பயன்படுத்தும்போது கிடைக்கும் புகையை விட குறைவாகவே வெளியிடுவதாகவும், இதனால் காற்று மாசு குறைவதால் "பயோ எரிபொருள்" என்ற சான்றிதழையும் பெற்று இருக்கிறது.

சாதனை புத்தகம்
பழைய எண்ணெய்யை வாகன எரிபொருளாக மாற்றுவதற்காக நடைபெறும் சுத்திகரிப்பு பணியின்போது வீணாகும் எண்ணெய்யையும் அவினாஷ் விட்டுவைக்கவில்லை. அதையும், கைகளை சுத்தம் செய்யும், வீட்டை சுத்தம் செய்யும் கிருமி நாசினியாக மாற்றி தயாரித்து வருகிறார். இந்த செயல்களின் மூலமாக அவினாஷ் நாராயணசாமியை பாராட்டி இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications