பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் கொடுமை! கிருஷ்ணகிரி இளைஞரை கேரளாவில் தட்டி தூக்கிய போலீஸ்
பெங்களூர்: இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த இளைஞரை 10 நாட்கள் தேடலுக்கு பின்னர் காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
கர்நாடகாவில் சில்மிஷம் செய்துவிட்டு, இளைஞர் கேரளாவுக்கு சென்று பதுங்கியுள்ளார். அவரை பிடிக்க காவல்துறை மேற்கொண்ட முடியற்சி பரவலாக பாராட்டை பெற்றிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியை சேர்ந்தவர் 29 இளைஞர் சந்தோஷ் டேனியல். இவர் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இங்கு திலக் நகர் பகுதியில் உள்ள ஜாகுவார் ஷோருமிர் கார் டெஸ்ட் டிரைவராக இவர் பணியாற்றி வருகிறார். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கவுரமான வேலை. நல்ல சம்பளமும் கூட. சந்தோஷுக்கு பெண் பார்ப்பதற்கு அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தனர். அப்படி இருக்கும்போதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
பெங்களூரின் சுட்டகுண்டேபாளையம், BTM Layout பகுதியில் உள்ள வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் இவரது முகம் பதிவாகியிருந்தது. இதுதான் அவருக்கு ஏழரையாக அமைந்துவிட்டது. அதாவது கடந்த 2ம் தேதி இரவு சுமார் 1.55 மணியளவில் இந்த பகுதியில் இரண்டு இளம் பெண்களை இவர் துரத்தி சென்றிருக்கிறார். அதில் ஒருவரிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். மற்றொரு பெண் இவரை எதிர்த்து சண்டையிட சந்தோஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இது அனைத்தும் சிசிடிவியில் முழுமையாக பதிவாகியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை. ஆனால், சிசிடிவி பொருத்தப்பட்டிருந்த வீட்டின் ஓனர் இந்த காட்சிகளை பார்த்து சந்தேகப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். காவல்துறை முழு வீடியோவையும் பார்த்துவிட்டு, தாங்களாக முன்வந்து வழக்குப்பதிவு செய்திருக்கின்றது. பாரதீய நியாய சனிதா சட்டப்பிரிவு பிரிவுகள் 74, 75 மற்றும் 78 ஆகிய சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.
வழக்குப்பதிவு செய்ததோடு மட்டும் நின்றுவிடாமல், சந்தோஷை பிடிக்க தனிப்படைகளையும் அமைத்துள்ளனர். சுமார் 300 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கேரளாவில் பதுங்கியிருந்த சந்தோஷை பிடித்துள்ளனர். இவரை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தது அவரது பைக் எண்தான் என்று போலீசார் கூறியுள்ளனர். பைக் நம்பரை வைத்து சந்தோஷின் மொபைல் எண்ணை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த எண்ணை டிராக் செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறை தன்னை தேடுகிறது என்பதை தெரிந்துக்கொண்ட சந்தோஷ் உடனடியாக ஒசூரில் சென்று பதுங்கியிருக்கிறார். பின்னர் அங்கிருந்து சேலத்திற்கு சென்றிருக்கிறார். இறுதியாக அவர் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள நரவண்ணூரில் பதுங்கியிருக்கிறார். அங்கு வைத்து கர்நாடக போலீசார் சந்தோஷை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் ஒருபுறம் இருக்கையில் மறுபுறம், கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா இந்த விவகாரம் பற்றி கூறியிருந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. அதாவது, "இவ்வளவு பெரிய நகரத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்" என்று கூறியிருந்தார். அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து, "நான் சொல்ல வந்தது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டிருக்கிறது" என்று விளக்கமளித்தார்.
எப்படி இருப்பினும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை, 300க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, ஏராளமான தனிப்படைகளை அமைத்து 10 நாட்களுக்கு பிறகு கர்நாடக போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பாராட்டை பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications