75 நிமிட பயணம்.. பெங்களூர் -மைசூரு நெடுஞ்சாலை டோல் கட்டணம் வெளியீடு.. எவ்வளவு தெரியுமா? போராட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் தொடங்கியது.
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி புதிதாக திறந்து வைத்த பெங்களூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 இடங்களில் டோல்கேட்கள் அமைக்கப்பட்டு இன்று முதல் வசூல் தொடங்கியது. இந்நிலையில் தான் வாகனங்களுக்கான டோல் கட்டண பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டோல் கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் தலைநகர் பெங்களூருக்கு அடுத்த படியாக முக்கிய நகரமாக மைசூர் உள்ளது. சிறந்த சுற்றுலாத்தளமான மைசூர்-பெங்களூர் இடையே 4 வழிச்சாலை இருந்தது.
இதில் பெங்களூரில் இருந்து மைசூருக்கோ, மைசூரில் இருந்து பெங்களூருவுக்கோ பயணம் செய்ய வேண்டும் என்றால் சுமார் 3 மணிநேரம் வரை ஆகும். இதற்கு முக்கிய காரணம் போக்குவரத்து நெரிசலாகும். இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி
இந்நிலையில் தான் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ரூ.8,480 கோடியில் பெங்களூரு-மைசூரு இடையே 10 வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 வழிகள் நெடுஞ்சாலைகளுக்கு, 4 வழிகள் சர்வீஸ் ரோடுகளாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன்மூலம் பெங்களூர்-மைசூரு இடையேயான பயண நேரம் 3 மணிநேரத்தில் இருந்து வெறும் 75 நிமிடங்களாக குறைந்துள்ளன.

சுங்க கட்டணம் வசூல் தொடங்கியது
இந்நிலையில் தான் 6 வழி விரைவு நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. சுங்க கட்டணம் வசூலிப்பதற்காக 2 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூரில் இருந்து நிடகட்டா இடையே ஒரு சுங்கச்சாவடியும், மைசூரு அருகே இன்னொரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் தொடங்கியது.

கட்டணம் எவ்வளவு?
அதன்படி விரைவுச்சாலையை பயன்படுத்தும் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு ஒரு வழி(Single) கட்டணமாக ரூ.135, இருவழி (Return) திரும்பி வருவதற்கான கட்டணமாக ரூ.205 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒருவழி கட்டணமாக ரூ.460, இருவழி கட்டணமாக ரூ.690 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கனரக வாகனங்களுக்கு ஒருவழி கட்டணமாக ரூ.460, இருவழி கட்டணமாக ரூ.690, மிக கனரக வாகனங்களுக்கு ஒருவழி கட்டணமாக ரூ.500, 720 என்ற அளவிலும், இருவழி கட்டணமாக ரூ.750, 1,080 என்ற அளவிலும் உள்ளது. மிகமிக கனரக வாகனங்களுக்கு ஒருவழி கட்டணமாக ரூ.880, இருவழி கட்டணமாக ரூ.1,315 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் போராட்டம்
இந்த சுங்க கட்டணம் மிக அதிகம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும் சுங்ககட்டணத்தை கண்டித்து இன்று காங்கிரஸ் சார்பில் டோல்கேட் அருகே போராட்டங்கள் நடைபெற்றன. சிலர் நெடுஞ்சாலையில் அமர்ந்து பேராடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போராட்டத்தையொட்டி டோல்கேட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இரந்தது.












Click it and Unblock the Notifications