இனி தோசை கிடையாது.. 2 வேளை மட்டுமே உணவு! பெங்களூர் PG ஹாஸ்டல்களில் அதிரடி மாற்றம்
பெங்களூர்: வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஓட்டல்களில் தோசை, பூரி போன்ற உணவுகள் விநியோகிப்பது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பெங்களூரில் PG ஹாஸ்டல்களிலும் இதேபோன்ற கட்டுப்பாடு அமலுக்கு வந்திருக்கிறது.
பெங்களூரில் உள்ள ஐடி ஊழியர்கள் PG ஹாஸ்டல்களை நம்பிதான் இருக்கின்றனர். ஆனால் இனி இந்த ஹாஸ்டல்களில் 2 வேளை மட்டுமே உணவு விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தோசை, பூரி, சப்பாத்தி போன்ற அதிக எரிவாயு தேவைப்படும் உணவுகளைத் தவிர்த்துவிட்டு, அரிசி சார்ந்த உணவுகளுக்கு மாறவும், வார நாட்களில் இரண்டு வேளை உணவாகக் குறைக்கவும், மின்சார சமையல் சாதனங்களைப் பயன்படுத்தவும் PG உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாடு
ஈரான்-இஸ்ரேல் போரினால் ஏற்பட்ட வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, பெங்களூரு முழுவதும் உள்ள PG தங்குமிடங்களை வெகுவாகப் பாதித்துள்ளது. கேஸை சேமிக்கவும், குடியிருப்பாளர்களுக்கு உணவு விநியோகத்தை உறுதி செய்யவும், பெங்களூரு பேயிங் கெஸ்ட் உரிமையாளர்கள் நலச் சங்கம் தற்காலிக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மாற்றுச் சமையல் முறை
அதன்படி, நகரில் லட்சக்கணக்கான குடியிருப்பாளர்களுக்குச் சேவை செய்யும் PG சமையலறைகள் இந்தத் தட்டுப்பாட்டின் கடும் விளைவுகளை ஏற்கெனவே எதிர்கொண்டுள்ளன. இதன் விளைவாக, PG உரிமையாளர்கள் அதிக கேஸை செலவிடும் உணவுகளைக் குறைத்து, வார நாட்களில் உணவு வேளைகளைக் குறைத்து, மாற்றுச் சமையல் முறைக்கு மாற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மோசமடையும் நிலைமை
நிலைமை மோசமடைந்து வருவதாகச் சங்கத்தின் தலைவர் அருண் குமார் தெரிவித்தார். அவர், "வணிகச் சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக, PG தங்குமிடங்களும் அதன் பாதிப்பை உணர்கின்றன. ஹோட்டல்கள் சிலிண்டர்கள் இல்லாமல் உணவுப் பொருட்களைத் தயாரிக்க முடியாமல் சிரமப்படுவதால் நிலைமை ஏற்கெனவே மோசமடைந்து வருகிறது. பல PG உரிமையாளர்களும் தற்போதைய சூழ்நிலையில் வணிகச் சிலிண்டர்கள் கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
PG ஹாஸ்டல்களும் உணவும்
இந்த நெருக்கடி குறித்து விவாதிக்க பெங்களூருவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் முக்கியக் குழு கூட்டங்களை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "பெங்களூருவில் வாழ லட்சக்கணக்கான மக்கள் PG தங்குமிடங்களைச் சார்ந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், PG குடியிருப்பாளர்களுக்கான உணவு ஏற்பாடுகளில் எந்தத் தடங்கலும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
2 வேளை மட்டுமே உணவு
தற்காலிக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, எரிவாயு பயன்பாட்டைக் குறைக்க உடனடியாக உணவுப் பட்டியலைக் கட்டுப்படுத்தச் சங்கம் PG உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை, PG-கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே உணவு வழங்க வேண்டும் என்றும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று வேளை உணவு வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல தோசை, பூரி, சப்பாத்தி மற்றும் போன்ற அதிக எரிவாயு தேவைப்படும் உணவுப் பொருட்களைத் தவிர்க்குமாறு PG-களைக் கேட்டுக்கொள்கின்றன. அதற்குப் பதிலாக லெமன் ரைஸ், புளியோதரை போன்ற அரிசி சார்ந்த உணவுகளைத் தயாரிக்க அறிவுறத்தப்பட்டிருக்கிறது. சாலட்கள், பழ சாலட்கள் மற்றும் பருப்பு வகைகள், குறைந்த சமையல் நேரம் தேவைப்படும் நெருப்பில்லாச் சமையல்'உணவுகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications