பெங்களூருவுக்கு ‘மஞ்சள் அலர்ட்'.. இன்று முதல் 4 நாட்கள் கொட்டப்போகும் கனமழை.. வெயிலுக்கு ‘குட்பை'
பெங்களூர்: பெங்களூரில் கோடை வெயில் அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்தான் இன்று முதல் மே 2ம் தேதி வரை 4 நாட்கள் பெங்களூரில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதோடு 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வீட்டில் ஏசி, மின்விசிறி இன்றி இருக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. மதிய வேளைகளில் டூவீலர்களில் பயணிப்போர் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி இரவு நேரத்தில் வெப்பம் அதிகரித்து மக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

பெங்களூர் நகரில் வசிக்கும் மக்களும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். பெங்களூரில் 36 டிகிரி செல்சியஸ்க்கு மேலாக வெப்பநிலை பதிவானதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். இந்நிலையில் தான் பெங்களூர் நகரில் வசிக்கும் மக்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் குட்நியூஸ் ஒன்றை கூறியுள்ளது.
பெங்களூருவுக்கு 4 நாள் 'மஞ்சள் அலர்ட்'
அதன்படி பெங்களூர் நகரில் இன்று முதல் மே 2ம் தேதி வரை 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்காக 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்படும்போது 24 மணிநேரத்தில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் இந்த தகவல் பெங்களூர் மக்களுக்கு நிம்மதியை அளிக்க வாய்ப்புள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் மழை
பெங்களூர் நகர் மட்டுமின்றி பெங்களூர் புறநகர் உள்பட மொத்தம் 26 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பீதர், கலபுரகி, விஜயாப்புரா, பெலகாவி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
யாதகிரி, ராய்ச்சூர், பாகல்கோட்டை, கொப்பல், தார்வார், கதக், பல்லாரி, விஜயநகர், ஹாவேரி, தாவணகெரே, சிவமொக்கா, சித்ரதுர்கா, உடுப்பி, தட்சிண கன்னடா, சிக்மகளூரு, ஹாசன், துமகூரு, குடகு, மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர், ராமநகர், சிக்கபள்ளாப்பூர், கோலார் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications