பெங்களூர் டெக்கி தம்பதி.. AI தொழில்நுட்பத்தால் போன ரூ.1 கோடி வேலை.. 9 ஆண்டு ரகசிய திருமணத்தின் சோகம்
பெங்களூர்: பெங்களூர் கொத்தனூர் பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்த சாப்ட்வேர் என்ஜினியர் தம்பதியின் தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இந்த தற்கொலை நடந்து 3 நாட்களுக்கு மேலாகியும் இதன் பரபரப்பு குறையவில்லை.. தற்போது இந்த தற்கொலை பற்றின கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளதுடன், தற்கொலைக்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
பானு சந்தர் ரெட்டி மற்றும் அவரது மனைவி ஷாஷியா சிராஜ் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தவர்கள்.. கடந்த மார்ச் 31-ம் தேதி, அடுக்குமாடி குடியிருப்பின் 17-வது மாடியில் இருந்து குதித்து ஷாஷியா உயிரை மாய்த்துக் கொள்ள, பானு சந்தர் ரெட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்..

பெங்களூரு காதல் தம்பதி எடுத்த முடிவு
இவர்களது மரணம் குடும்பத்தினரை நிலைகுலைய வைத்த நிலையில், மரணத்தின் பின்னணியில் வேலை இழப்பு மற்றும் குடும்பப் போராட்டங்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது..
அதாவது பானு சந்தர் ரெட்டி அமெரிக்காவில் வருஷத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் பெரிய வேலையில் இருந்துள்ளார்.. ஆனால் அவர் வேலை பார்த்த நிறுவனம் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் புகுத்தியதால் அவரை வேலையை விட்டு தூக்கிவிட்டது..
பறிபோன ஐடி வேலை
அமெரிக்காவிலும் கனடாவிலும் தீவிரமாக வேலை தேடியும் கிடைக்காததால், அவர் மனமுடைந்து இந்தியா திரும்பினார்.. மறுபுறம், ஷாஷியா ஐதராபாத்தில் ஒரு வேலையில் இருந்து விலகி, பெங்களூருவில் உள்ள ஐ.பி.எம் நிறுவனத்தில் மாதம் பல லட்சங்கள் சம்பளம் வாங்கும் வேலையில் சேர்ந்தார்.. இழந்த வேலையை திரும்பப் பெற முடியாத ஏமாற்றமும், பணப் பிரச்சனைகளும் பானு சந்தரை ரொம்பவே வாட்டியுள்ளது..
இவர்களது காதல் கதை ஒரு சினிமாவை போலவே சவால்கள் நிறைந்ததாக இருந்தது.. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இவர்கள் 9 வருஷத்துக்கு முன்பே யாரிடமும் சொல்லாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்களாம்.. அதாவது "அலைபாயுதே" பட பாணியில், கல்யாணத்துக்குப் பிறகும் அவரவர் வீடுகளிலேயே வசித்து வந்தனர்..
ஒரு கட்டத்தில் பானு சந்தர் தன்னுடைய அம்மாவிடம் உண்மையை சொல்லிவிட்டாராம்.. இதைக்கேட்டதுமே அவரது குடும்பத்தினர் பானு சந்தரை ஒதுக்கிவிட்டனர்.. ஷாஷியாவிற்கும் அவரது குடும்பத்தோடு இதே போன்ற சண்டை நடந்துள்ளது.. அதனால் பண்டிகை நாட்களுக்கு மட்டும் வீட்டுக்குச் சென்று வரும் நிலையில் இருந்துள்ளார்.
போன் எடுக்காத அம்மா
இதனால் தம்பதி இருவரும் பெங்களூருவில் தங்களது புது வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.. எனினும் குடும்பத்தின் புறக்கணிப்பு மற்றும் ஐடி கம்பெனி வேலை இல்லாதது பானு சந்தரை நிலைகுலைய செய்தது..
சம்பவத்தன்று வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய ஷாஷியா, தனது கணவர் பிணமாகத் தொங்குவதை பார்த்து கதறித் துடித்தார்.. அந்த நேரத்தில் அவர் தனது அம்மாவை போனில் கூப்பிட 2 முறை முயற்சி செய்தார்.. ஆனால் அவரது அழைப்பை அம்மா எடுக்கவில்லையாம்.
அம்மா மன்னிச்சிருங்க
இதனால் மனமுடைந்த ஷாஷியா, கடைசியாக தனது அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.. அதில், "அம்மா என்னை மன்னித்து விடுங்கள், உங்களிடம் சொல்லாமல் கல்யாணம் செய்து கொண்டது தப்பு தான்.. நான் பொய் சொல்லிவிட்டேன், தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்" என்று ஆங்கிலத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு, மாடியில் இருந்து குதித்து உயிரை விட்டார்.
அதேபோல தற்கொலைக்கு முன்பு பானு சந்தர் ரெட்டியும் கடிதம் எழுதி வைத்துள்ளார்.. அந்த தற்கொலை கடிதத்தில், "எனக்கு மற்றவர்களால் பல பிரச்சனைகள் வந்தது.. எனக்கும் என் மனைவிக்கும் நீதி கிடைக்கவில்லை.. என்னால் என் மனைவியை என் பெற்றோரிடம் கூட அறிமுகம் செய்து வைக்க முடியவில்லை" என்றெல்லாம் தனது மனக்குமுறலை கொட்டி உள்ளார்.
2 கடிதங்கள் - போஸ்ட் மார்ட்டம்
2 கடிதங்களையும் கைப்பற்றிய போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டனர்.. ஆனால் ஒரே ஆம்புலன்சில் 2 பேரின் சடலங்களையும் கொண்டு செல்ல 2 குடும்பத்தாரும் ஒத்துக்கவில்லை.
இதை பார்த்ததுமே அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. "வாழும் போது தான் அவர்கள் ஒன்றாக இல்லை, செத்த பிறகாவது அவர்கள் ஒன்றாகப் போகட்டுமே" என்று சத்தம் போட்டார்கள்.. அதற்கு பிறகுதாதன் அவர்கள் 2 பேரின் உடல்கள் ஒரே ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டதாம்.
ஏ.ஐ தொழில்நுட்பத்தால் வந்த வேலை இழப்பும், குடும்ப பிரச்சனைகளும் ஒரு ஜோடியை தற்கொலைக்குத் தள்ளிவிட்டு இன்று 2 உயிரையே இழக்க செய்துவிட்டது..!!












Click it and Unblock the Notifications