செருப்புக்குள் பதுங்கியிருந்த எமன்.. வாயில் நுரை தள்ளி பலியான ஐடி ஊழியர்! பெங்களூரில் ஷாக்
பெங்களூர்: செருப்புக்குள் பாம்பு பதுங்கியிருந்து கடித்ததில், 41 வயதான மென்பொருள் பொறியாளர் உயிரிழந்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சனிக்கிழமை அன்று நடந்திருக்கிறது. இறந்தவர் ரங்கநாத லேஅவுட்டைச் சேர்ந்த மஞ்சு பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

பிரகாஷ் தனது க்ரோக்ஸ் செருப்புகளை வீட்டின் முன் கதவுக்கு வெளியே விட்டு வைத்திருந்தார். அருகில் உள்ள கடையில் ஜூஸ் வாங்கி வர செருப்பை அணிந்து வெளியே சென்ற அவர், திரும்பி வந்து செருப்பை கழற்றிவிட்டுவிட்டு வீட்டிற்குள் வந்து படுத்திருக்கிறார். செருப்புக்குள் பாம்பு புகுந்திருந்தது அவருக்குத் தெரியாது. அவரது காலில் உணர்ச்சியற்ற நிலை இருந்ததால், பாம்பு கடித்தது அவருக்கு உடனடியாகத் தெரியவில்லை.
பின்னர், குடும்பத்தினர் ஒருவர் செருப்புக்குள் பாம்பு இருப்பதை கவனித்து, பிரகாஷின் தந்தைக்கு தகவல் தெரிவித்தார். அவர் கவனமாக அந்தப் பாம்பை வெளியே எடுத்தார். அது உயிரிழந்த நிலையில் காணப்பட்டது. க்ரோக்ஸ் செருப்புக்குள் மூச்சுத்திணறல் காரணமாகவே பாம்பு இறந்திருக்கலாம் என குடும்பத்தினர் நினைத்திருக்கின்றனர்.
பிரகாஷின் தாய், சந்தேகத்தின் அடிப்படையில் பிரகாஷை போய் பார்த்திருக்கிறார். அவர் படுக்கையில் அசைவற்று இருப்பதையும், வாயைச் சுற்றிலும் நுரை இருப்பதையும், காலில் ரத்தம் வருவதையும் கண்டார். உடனடியாக குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. செருப்பு, ஷூ உள்ளிட்டவற்றை மழைக்காலங்களில் பரிசோதித்து பார்த்த பின்னர் அணிய வேண்டும் என்று தொடர்ந்து வனத்துறையினர் அறிவுறுத்தியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications