உடலுறவுக்கு மறுத்த மனைவி கொலை.. காணாமல் போனதாக நாடகம்.. பொறி வைத்து தூக்கிய போலீஸ்
பெங்களூர்: உடலுறவுக்கு தொடர்ந்து மறுத்து வந்த மனைவியை கொலை செய்து அவர் காணாமல் போய்விட்டதாக நாடகமாடிய கணவரை பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
பிகார் மாநிலம் அர்வால் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரித்வி ராஜ் சிங் (28). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி குமாரி என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. ப்ரித்வி ராஜ் சிங் கடந்த சில ஆண்டுகளாக பெங்களூரில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இதனால் திருமணம் ஆனதும் தனது மனைவியை அழைத்துக் கொண்டு அவர் பெங்களூரு வந்துவிட்டார்.
இந்த சூழலில், தனது மனைவி ஜோதி குமாரி காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் கடந்த வாரம் ப்ரித்வி ராஜ் சிங் புகார் அளித்தார். இதன்பேரில் பெங்களூரு போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜோதி குமாரியை தேடி வந்தனர். அப்போது, ப்ரித்வி ராஜின் நடவடிக்கைகளில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு தெரியாமலேயே போலீஸார் அவரை பின்தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது, மனைவி காணாமல் போன பதற்றம் சிறிதும் இல்லாமல் மது அருந்துவது, நண்பர்களுடன் திரையரங்குகளுக்கு செல்வது என ப்ரித்வி ராஜ் ஜாலியாக இருந்துள்ளார்.
இதையடுத்து, ப்ரித்வி ராஜை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது நடந்த உண்மைகளை வாக்குமூலமாக ப்ரித்வி ராஜ் அளித்தார். அதில், "எனது மனைவி ஜோதிகுமாரி என்னை விட 10 வயது மூத்தவர். ஆனால், இதனை மறைத்து அவரது பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இது எனக்கு தெரியவரவே நான் அதிர்ச்சியடைந்தேன். பிறகு, இனி ஒன்றும் செய்ய முடியாது என நினைத்து அவருடன் வாழ்ந்தேன். ஆனால் திருமணமான நாளில் இருந்தே என்னுடன் அவர் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை. மேலும், என்னையும், எனது குடும்பத்தினரையும் காட்டுமிராண்டி என அவர் கூறி வந்தார். இதனால் பொறுமையிழந்த நான், பிகாரில் இருந்து எனது நண்பனை வரவழைத்து ஜோதி குமாரியை கொலை செய்தேன்" என ப்ரித்வி ராஜ் கூறினார்.
இதனைத் தொடர்ந்து ப்ரித்வி ராஜை கைது செய்த போலீஸார், அவர் கூறிய இடத்தில் புதைத்து வைக்கப்பட்ட ஜோதி குமாரியின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஜோதி குமாரியை கொலை செய்ய ப்ரித்வி ராஜுக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர்.