கர்நாடகாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: இன்று முதல் பாஜக போராட்டம்! ஒரே பரபரப்பு!
பெங்களூர்: கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உடனே அமலுக்கு வந்ததை கண்டித்து அதை வாபஸ் பெறக் கோரி பாஜக இன்று முதல் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை திடீரென கடுமையாக உயர்த்தின. கர்நாடகாவில் பெட்ரோல் மீதான விற்பனை வரி 25.92% இருந்தது. இது தற்போது 29.84% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல டீசல் மீதான விற்பனை வரி 14.34% ஆக இருந்தது. இதுவும் 18.44% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பெட்ரோல் மீதான விற்பனை வரி 3.92%; டீசல் மீதான விற்பனை வரி 4.1% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விற்பனை வரி உயர்வு உடனடியாகவும் அமலுக்கு வந்தது.

கர்நாடகா அரசின் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி உயர்வால், இம்மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3 உயர்ந்து ரூ102.84 ஆகவும் டீசல் விலை ரூ.3.50 உயர்ந்து 1 லிட்டர் டீசல் ரூ 89.43 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரேயடியாக பெட்ரோல், டீசல் விலை ரூ3 முதல் ரூ3.50 வரை உயர்ந்துள்ளதால் பெரும் அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ளனர் பொதுமக்கள்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு, சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக கடுமையான நிதிச்சுமையை எதிர்கொண்டிருக்கிறது; இதனை சமாளிக்கவே பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தி இருப்பதாக பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநில அரசு உடனடியாக இந்த விலை உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால் திங்கள்கிழமை முதல் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா எச்சரித்துள்ளார். அதன்படி இன்று முதல் கர்நாடகாவில் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications