கோயில்களுக்கு தனியாக 10% வரி.. கர்நாடக அரசின் புது சட்டம்.. உடனே பாய்ந்து வந்த பாஜக! என்ன மேட்டர்
பெங்களூர்: கர்நாடக அரசு இந்து கோயில்களுக்குத் தனியாக 10% வரியை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளும் மாறி மாறி விமர்சித்துள்ளன.
கர்நாடகாவில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அம்மாநில முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், தொடர்ந்து அங்கே சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

அதன்படி கர்நாடகா சட்டசபையில் நேற்று புதன்கிழமை 'கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024' நிறைவேற்றப்பட்டது. இந்த விஷயத்தை இப்போது கையில் எடுத்துள்ள பாஜக கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு எதிரியாகச் செயல்படுவதாகச் சாடியுள்ளது.
புதிய சட்டம்: இந்த புதிய சட்டத்தின்படி ஒரு கோடிக்கு ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள கோயில்களிடம் இருந்து அரசு 10 சதவீத வரியை வசூலிக்கும். அதேபோல ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ள கோவில்களில் இருந்து 5 சதவீத வரியையும் கர்நாடக அரசு வசூலிக்கும். இந்த விவகாரத்தை இப்போது கையில் எடுத்துள்ள அம்மாநில பாஜக, ஆளும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது.
இது குறித்து கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா கூறுகையில், "காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு எதிரான கொள்கைகளைக் கடைப்பிடித்து தனது கஜானாவை நிரப்ப விரும்புகிறது. மாநிலத்தில் தொடர்ந்து இந்து விரோத கொள்கைகளைக் கடைப்பிடித்து வரும் காங்கிரஸ் அரசு, தற்போது இந்து கோவில்களின் வருமானத்தைக் குறிவைத்துள்ளது. இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய மசோதாவை நிறைவேற்றி தனது காலி கஜானாவை நிரப்பத் திட்டமிட்டுள்ளன..
பாஜக எதிர்ப்பு: இதில் கிடைக்கும் வருமானத்தை அவர்கள் வேறு எதோ காரணத்திற்காகப் பயன்படுத்த உள்ளனர். இந்த புதிய மசோதாவின் கீழ் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் கோவில்களின் வருமானத்தில் 10% கர்நாடக அரசு வசூலிக்கும்.. கர்நாடக அரசு வறுமையில் உள்ளதைத் தான் காட்டுகிறது. கடவுளுக்காகவும் கோயில் வளர்ச்சிக்காகவும் பக்தர்கள் கொடுத்த இந்த காணிக்கையை, திருப்பணிக்கு ஒதுக்க வேண்டும். அல்லது கோயில் வசதிகளை மேம்படுத்தப் பயன்படுத்தலாம்.
ஆனால் அவை வேறு நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்டால், அது மக்களின் தெய்வ நம்பிக்கையைக் குலைப்பதாக இருக்கும். தேவையற்ற குழப்பம் ஏற்படும். அப்படியே வரியை வசூல் செய்வதாக இருந்தால் அனைத்து மத நிறுவனங்களில் இருந்தும் வசூலிக்கலாம். அது ஏன் இந்து கோயில்களில் இருந்து மட்டும் வசூலிக்கிறார்கள். மற்ற மத வழிபாட்டுத் தளங்களில் இருந்து வரியை வசூலிக்காமல் இருப்பது ஏன்" என்றும் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசை சரமாரியாகச் சாடினர்.
பதிலடி: பாஜகவின் இந்த கருத்துக்குக் கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஏன் எப்போதும் மதத்தில் அரசியல் செய்கிறீர்கள். காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரானது என்று சொல்லி பாஜக எப்போதுமே அரசியல் ஆதாயம் தேடுகிறது.. ஆனால், உண்மையில் காங்கிரஸ் தான் இந்து மதத்தின் உண்மையான ஆதரவாளர்கள். ஏனென்றால், பல ஆண்டுகளாகக் காங்கிரஸ் அரசுகள் தான் கோவில்களையும், கோவில் சொத்துகளையும் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications