750 Volts மின்சாரம் பாயும்.. பெங்களூர் மெட்ரோ ரயில் பாதையில் விழுந்த பாதுகாவலர்.. தப்பியது எப்படி?
பெங்களூர்: பெங்களூர் மஞ்சள் வழித்தட மெட்ரோ பாதையில் தொடர்ந்து 750 வோல்ட் என்ற அளவில் மின்சாரம் பாய்ந்து வருகிறது. இந்த மின்சாரத்தின் உதவியில் தான் மெட்ரோ ரயில்கள் இயங்கி வரும் நிலையில் அந்த பாதையில் பாதுகாவலர் ஒருவர் திடீரென்று தவறி விழுந்த நிலையில் நூலிழையில் தப்பினார். காயமின்றி அவர் தப்பித்தது எப்படி? என்பது பற்றி பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. பெங்களூர் சல்லக்கட்டா முதல் ஓயிட்பீல்டு வரையும், மாதவராவில் இருந்து கனகபுரா ரோடு சில்க் ரோடு வரையும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது.

சமீபத்தில் அதாவது ஆகஸ்ட் 10ம் தேதி பெங்களூர் ஆர்வி ரோடு முதல் பொம்மச்சந்திரா வரை மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த மெட்ரோ ரயிலில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர்.
மெட்ரோ ரயில் பாதையில் மின்சாரம் செல்லும். சுமார் 750 வோல்ட் அளவிலான நேரடி மின்சாரத்தின் (750 V Direct Current) மூலமாக தான் மின்சார ரயில்கள் இயங்கி வருகின்றன. இதனால் மெட்ரோ பாதையை மக்கள் நெருங்கிவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு ஸ்டேஷன்களிலும் மஞ்சள் நிறத்தில் கோடுகள் இருக்கும்.
அதுமட்டுமின்றி பாதுகாவலர்கள் பணியில் இருப்பார்கள். அந்த வகையில் நேற்று மஞ்சள் வழித்தடத்தில் உள்ள ராகிகுட்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாவலர்கள் பணியில் இருந்தனர். சுமார் 11.10 மணியளவில் திடீரென்று பிளாட்பாரம் 2ல் பணியில் இருந்த பாதுகாவலர்கள் ஒருவர் கால்தவறி மெட்ரோ ரயில் பாதையில் விழுந்தார்.
இதை பிளாட்பாரம் 1ல் இருந்த பாதுகாவலர் கவனித்தார். உடனடியாக அவர் ETS எனும் Emergency Trip Switch-யை அழுத்தினார். இதனால் மெட்ரோ பாதையில் செல்லும் மின்சப்ளை நிறுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த பயணிகள் ஓடிச்சென்று அந்த காவலாளியை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பித்தார். அவர் விழுந்த சமயத்தில் உடனடியாக மின்சப்ளை நிறுத்தப்பட்டதால் அவர் உயிரும் பிழைத்தார். இதுபற்றி மெட்ரோ அதிகாரி கூறுகையில், ‛‛மெட்ரோ பாதையில் பாதுகாவலர் திடீரென்று விழுந்தார்.
உடனடியாக மின்சப்ளை நிறுத்தப்பட்டால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் மெட்ரோ ரயில் சேவை 6 நிமிடங்கள் வரை பாதிககப்பட்டது. அதன்பிறகு மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயங்க தொடங்கியது'' என்றார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாவலர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் இன்னொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதுகாவலர்கள் 16 மணிநேரம் பணியமர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பல பாதுகாவலர்கள் சரியான தூக்கமின்றி வேலை செய்து வருவதும், இதனால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications