பரபரத்த பெங்களூர்.. பாஜக எம்பி சகோதரர் அதிரடி கைது! நாடாளுமன்ற கலர் குண்டு சர்ச்சையில் சிக்கினாரே
பெங்களூர்: நாடாளுமன்றத்தில் கலர் குண்டு வீசியவர்களுக்கு பார்வையாளர் மாடத்தில் அமர பரிந்துரைத்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் சகோதரர் பெங்களூரில் கைது செய்யப்பட்டு உள்ளார். ஏன் தெரியுமா? விரிவாக பார்ப்போம்.
மைசூர் தொகுதி பாஜக எம்பியாக இருப்பவர் பிரதாப் சிம்ஹா. கடந்த சில வாரங்களுக்கு முன் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது அத்துமீறி சிலர் மக்களவைக்கு உள்ளேயும் நாடாளுமன்ற வளாகத்திற்கு உள்ளேயும் கலர் குண்டு வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் கர்நாடக மாநிலம் மைசூர் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாதான் பார்வையாளர் மாடத்திற்கான டிக்கெட் கிடைக்க பரிந்துரை செய்து இருந்தார். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் புதிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்.

பிரதாப் சிம்ஹாவுக்கு விக்ரம் சிம்ஹா என்ற சகோதரர் உள்ளார். இவர் பல கோடி மதிப்பிலான 126 மரங்களை வெட்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து இருக்கிறார்கள். கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் மரங்களை வெட்டி வேறு பகுதிக்கு கடத்தியதாக போலீஸ் குற்றம்சாட்டி உள்ளது. மத்திய குற்றப்பிரிவின் முறைப்படுத்தப்பட்ட குற்ற தடுப்பு படையினர் இவரை கைது செய்து வனத்துறை வசம் ஒப்படைத்து உள்ளார்கள். எம்பியின் சகோதரர் மரங்களை வெட்டியதற்கான ஆவணங்கள் இருப்பதாக போலீஸ் தெரிவித்து உள்ளது.
விக்ரம் சிம்ஹா மரங்களை வெட்டி கடத்தியது உறுதியான நிலையில், அவர் தப்பிச் சென்றார். இதனை அடுத்து செல்போன் சிக்னல், சிசிடிவி கேமரா அடிப்படையில் அவரை போலீசார் கண்காணித்தனர். அவர் பெங்களூரில் பதுங்கி இருப்பது உறுதியான நிலையில், வனத்துறை அதிகாரிகள், காவல் துறையினர் உதவியுடன் விக்ரம் சிம்ஹாவை கைது செய்து உள்ளார்கள். அவரை கூடுதல் விசாரணைக்காக ஹாசன் மாவட்டத்துக்கு அழைத்து சென்று உள்ளனர்.
நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா சிக்கி நெருக்கடியான நிலையில் இருந்து வரும் சூழலில் அவரது சகோதரர் மரங்களை வெட்டிய கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருப்பது அவருக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரையின் பேரில் மக்களவையின் பார்வையாளர் மாடத்திற்கு வந்த 2 பேர் எம்பிக்கள் அமரும் இருக்கைகள், மேஜைகளில் கலர் புகை கக்கும் கருவிகளுடன் குதித்து அத்துமீறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications