கொரோனா முன்கள போராளிகளுக்கு சமர்ப்பிக்க.. காலண்டரில் கைவித்தையை காட்டிய பெங்களூர் இளைஞர்!.. சபாஷ்!
பெங்களூர்: பெங்களூரில் பழங்கால மருத்துவ வசதிகளை வால் பேப்பராக வைத்து காலண்டர் தயாரித்து அதை கோவிட் முன் கள போராளிகளுக்காக அர்ப்பணித்துள்ளார் ஒரு இளைஞர்.
பெங்களூர் காந்திபுரம் வைட்பீல்டு பகுதியில் ஸ்டேஷனரி கடை வைத்து நடத்தி வருபவர் பாபு ஏசாஸ் (38). இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வரலாற்றை பறைச்சாற்றும் விதமான காலண்டர்களை ஆன்லைனில் உருவாக்கி வருகிறார்.
இந்த காலண்டர்களுக்காக இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த ஆண்டும் பாபுவின் காலண்டர் உருவாக்கத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
பழங்கால மருத்துவமனைகள்
அப்போதுதான் பெங்களூரில் பழங்கால மருத்துவமனைகள், மருத்துவ வசதிகள் குறித்த புகைப்படங்கள் அடங்கிய காலண்டரை அவர் உருவாக்கியுள்ளார். இதை கொரோனா முன் கள போராளிகளுக்கு அர்ப்பணித்துள்ளார். மொத்தம் 12 பக்கங்கள் கொண்ட இந்த காலண்டரில் கருப்பு வெள்ளை நிறத்தில் புகைப்படங்ள் இருந்தன.
மருத்துவ ஊழியர்கள்
இதுகுறித்து பாபு கூறுகையில் 2021 ஆம் ஆண்டு எந்த மாதிரியான காலண்டரை உருவாக்குவது என யோசித்தேன். அப்போது தான் பழங்கால மருத்துவ வசதிகள், மருத்துவமனைகளை வைத்து உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதன் படி அதை உருவாக்கி பெங்களூரில் உள்ள மருத்துவர்கள், நர்ஸுகள், மற்ற மருத்துவ ஊழியர்களுக்கு அர்ப்பணித்துள்ளேன்.
ஜனவரி மாத காலண்டர்
இந்த காலண்டரினை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளேன். இதை டிசம்பர் 29-ஆம் தேதியே நான் வெளியிட்டுவிட்டேன். பெரும்பாலான படங்கள் வரலாற்று ஆர்வலர்கள் பகிர்ந்தது. அவர்கள் மிகவும் அரிதான படங்களை எனக்கு அனுப்பி வைத்தார்கள். ஜனவரி மாத காலண்டருக்கு விக்டோரியா மருத்துவமனை படத்தை பயன்படுத்தியுள்ளேன்.
போரிங் மருத்துவமனை
பிப்ரவரி மாதத்திற்கு போரிங் மருத்துவமனையையும் மார்ச் மாதத்திற்கு வாணி விலாஸையும் ஏப்ரல் மாதத்திற்கு செயிண்ட் மார்தா மருத்துவமனையையும் பயன்படுத்தியுள்ளேன். 1909ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பயன்படுத்தியுள்ளேன் என்றார். இவரது காலண்டரால் பேஸ்புக் முழுவதும் லைக்குகள், கமென்ட்டுகளால் மூழ்கியுள்ளது. இதை பிரிண்ட் செய்யுமாறு பலர் கோரிக்கை விடுத்தும் அவ்வாறு செய்தால் அது வியாபார நோக்கில் ஆகிவிடும் என்பதால் அதை பாபு மறுத்துள்ளார்.