இந்தியில் கேள்வி கேட்ட நிருபர்.. "தமிழகத்தில் உங்களால் இதுபோல கேட்க முடியுமா.." டென்ஷனான கார்கே
பெங்களூர்: கர்நாடகாவில் மூடா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அங்கிருந்த நிருபர் ஒருவர் இந்தியில் கேள்விகள் கேட்க முயன்றார். இதனால் கடுகடுத்த கார்கே, தமிழகத்திற்குச் சென்று இதுபோல இந்தியில் கேட்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கர்நாடகாவில் உள்ள மூடா எனப்படும் அதாவது மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீட்டு மனை ஒதுக்கீடு தான் அங்கே இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

ஆனால், கர்நாடக முதல்வர் சித்தராமையா இதற்கு வேறு விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது தனது மனைவி பார்வதி பெயரிலான 3.14 ஏக்கர் நிலத்தை மூடா நிறுவனம்தான் ஆக்கிரமித்து இருந்தது என்றும் இதற்கு இழப்பீடாகவே 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன எனக் கூறியுள்ளார்.
கர்நாடகா மூடா விவகாரம்: இந்த விளக்கத்தை ஏற்க மறுக்கும் அங்குள்ள எதிர்க்கட்சிகள் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து அனுமதி கோரப்பட்டது. அதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நேற்று உத்தரவிட்டார்.
இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் கார்கே நேற்றைய தினம் பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். முதல்வர் சித்தராமையா மீது கர்நாடக ஆளுநர் வழக்குத் தொடர அனுமதி அளித்ததன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.. மேலும், வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்த பிறகே இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியில் கேள்வி: மேலும், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா போன்ற பாஜக அல்லாத அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து சிக்கல் தருவதாகத் தெரிவித்த அவர், இந்த மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர்களை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். இந்த செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் அவர் அங்கிருந்து கிளம்ப முயன்றார். அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் கார்கேவிடம் இந்தியில் கேள்வி கேட்க முயன்றார்.
கடுகடுத்த கார்கே: இதைக் கேட்டதும் அதிருப்தியடைந்த கார்கே, கர்நாடகாவில் இருக்கும் போது இந்தியில் ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்று கடுகடுத்தார். மேலும், கர்நாடகாவுக்கு வரும் போது சிறிதாவது கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
கன்னடம் கற்றுக் கொள்ள அட்வைஸ்: தொடர்ந்து பேசிய கார்கே, "உங்களால் தமிழ்நாட்டிற்குச் சென்று அங்குள்ள தலைவர்களிடம் இந்தியில் கேள்வி கேட்க முடியுமா.. கர்நாடகாவுக்கு வரும் போது கொஞ்சமாவது கன்னட மொழியை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். அவரது இந்த பதில் இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications