வீரியமான காவிரி போராட்டம்! கர்நாடகா-தமிழக எல்லையில் பதற்றம்.. போக்குவரத்து பாதிப்பு! பரபரப்பு
பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் பெங்களூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகா-தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் காலிக்குடங்களுடன் சாலையில் படுத்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு செய்து கொள்வதில் பிரச்சனை உள்ளது. கர்நாடகாவில் மழை இல்லை எனக்கூறி தமிழ்நாட்டுக்கு அம்மாநில அரசு தண்ணீர் தர மறுத்து வருகிறது.

இருப்பினும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவுப்படியும், வறட்சி கால பங்கீட்டு முறைப்படியும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இதனால் தமிழ்நாட்டுக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டிய சூழல் கர்நாடகாவுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடகாவில் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் இன்று மண்டியா மாவட்டத்தில் பந்த் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மண்டியாவில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சிலர் மண்ணை அள்ளி தின்று விவசாயிகள் வாயில் ஆளும் காங்கிரஸ் அரசு மண்ணை போட்டுவிட்டதாக கூறி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் பெங்களூரிலும் பல இடங்களில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையான அத்திபள்ளியில் இன்று திரண்டனர். அவர்கள் காலி குடங்களுடன் சாலையில் படுத்து போராடினர். அப்போது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷமிட்டனர். அதோடு வாகனங்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதனை போலீசார் தடுக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், கன்னட அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கன்னட அமைப்பை சேர்ந்தவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். அதன்பிறகு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.












Click it and Unblock the Notifications