26ம் தேதி பந்த்.. பெங்களூரில் எந்தெந்த சேவைகள் இருக்கும்.. எதுவெல்லாம் முடங்கும்? இதோ முழு விபரம்
பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவதை எதிர்த்து பெங்களூரில் நகரில் வரும் 26ம் தேதி பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 100க்கும் அதிகமான அமைப்புகள் ஆதரவு கொடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் அன்றைய தினம் பெங்களூர் நகரில் எந்தெந்த சேவைகள் இருக்கும்? எந்தெந்த சேவைகள் முடங்கும்? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டுக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரி ஆற்றில் திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனை ரத்து செய்யக்கோரி கர்நாடகா சார்பில் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியானது.

இதனால் தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும். இதை மீறினால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். இதனால் கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது.
இந்நிலையில் தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து கேஆர்எஸ் அணை இருக்கும் மண்டியா மாவட்டத்தில் நேற்று பந்த் நடந்தது. அதேபோல் பெங்களூரிலும் போராட்டங்கள் நடந்தன. கர்நாடகா-தமிழக எல்லையில் வாகனங்களை கன்னட அமைப்பினர் தடுத்து நிறுத்த முயன்றதால் கைது செய்யப்பட்டனர். மேலும் பெங்களூர் மைசூர் வங்கி சர்க்கிள், சுதந்திர பூங்கா உள்ளிட்ட இடங்களில் விவசாய அமைப்பினர் மற்றும் கன்னட அமைப்பினர், பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து பெங்களூரில் பந்த் நடத்துவது குறித்து சுதந்திர பூங்காவில் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் பெங்களூரில் வரும் 26ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா ஜல சம்ரக்சன சமிதி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுபற்றி கரும்பு விவசாயிகள் அமைப்பின் தலைவர் குருபூர் சாந்தகுமார் கூறுகையில், ‛‛பெங்களூரில் வரும் 26ம் தேதி பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழில்துறை உள்பட அனைத்து அமைப்பினரிடம் ஆதரவு கோரப்பட்டுள்ளது. இது பெங்களூர் மக்களின் குடிநீர் ஆதாரத்துக்கான பிரச்சனையாக உள்ளது. இதனால் ஐடி நிறுவனங்கள், வங்கி, வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளிடமும் ஆதரவு கோரினோம். 100க்கும் அதிகமான அமைப்பை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்'' என்றார்.

இதனால் 26ம் தேதி பெங்களூர் மொத்தமாக முடங்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பெங்களூரில் பந்த் நடக்கும் வரும் 26ம் தேதி எந்தெந்த சேவைகள் இருக்கும்? எந்தெந்த சேவைகள் இருக்காது? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பந்த் நடக்கும் 26ம் தேதி பெங்களூரில் அவசரகால சேவைகள், அரசு அலுவலகங்கள், மெட்ரோ சேவைகள் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்து கடைகள் (மெடிக்கல்), நர்சிங் ஹோம் இயங்கும்.
அதேவேளையில் செயலி அடிப்டையில் இயங்கும் டேக்ஸி, பைக் சேவைகள், ஆட்டோ சேவைகள், சரக்கு வாகனங்கள் இயங்காது. மேலும் பிற கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், சாலையோர வியபாரிகள், ஹோட்டல், விடுதிகள், தியேட்டர்கள், மால்கள், மல்டி பிளக்ஸ்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்குமா? இல்லையா? என்பது குறித்த அறிவிப்பு நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என கர்நாடகா தனியார் தொடக்க மற்றும் இடைநிலை பள்ளியின் நிர்வாக சங்கம் (கேஏஎம்எஸ்) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அரசு சார்பில் இயங்கும் கேஎஸ்ஆர்டிசி, பிஎம்டிசி பஸ்கள் இயங்குமா? இல்லையா? என்பதும் 26ம் தேதி காலையில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை பொறுத்தே முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications