அமைதி.. ஆள்நடமாட்டமே இல்லை.. பெங்களூர் பந்த்தால் வெறிச்சோடிய ஒசூர் ரோடு! போட்டோ பாருங்க
பெங்களூர்: பெங்களூர் பந்த் காரணமாக காலை முதல் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெங்களூர்-ஒசூர் ரோடு இன்று ஆள்நடமாட்டம் இன்றியும், வாகன போக்குவரத்து இன்றியும் முற்றிலுமாக வெறிச்சோடியது.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கர்நாடகா அரசு சார்பில் தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து இன்று பெங்களூரில் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா ஜல சம்ரக்சன சமிதி தலைமையில் பெங்களூர் பந்த் நடப்பதாக கரும்பு விவசாயிகள் அமைப்பின் தலைவர் குருபூர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த பந்த்துக்கு கன்னட சலுவளி கட்சியின் தலைவரான வாட்டாள் நாகராஜ் ஆதரவு வழங்கவில்லை. அவர் தலைமையில் வரும் 29 ம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த் நடத்தப்பட உள்ளது. இதனால் இன்றைய பந்த் போராட்டம் என்பது பிசுபிசுத்துள்ளது. பிஎம்டிசி, கேஎஸ்ஆர்டிசி அரசு பஸ்கள் காலை முதல் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. மெட்ரோ ரயில் சேவையும் பாதிப்பின்றி செயல்பட்டு வருகிறது.
மேலும் பெரும்பாலான ஓட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் பந்த் என்பது முழுமையாக வெற்றி பெறாத சூழல் உள்ளது. இருப்பினும் கூட பெங்களூரில் ஒசூர் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுவாக காலை 8 மணியளவில் பெங்களூர்-ஒசூர் சாலை என்பது மிகவும் பரபரப்பாக இருக்கும். பள்ளி, கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுக்கு மக்கள் ஏராளமானவர்கள் வாகனங்களில் செல்வார்கள்.
அதேபோல் தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான பஸ், லாரி போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். ஆனால் இன்றைய தினம் பெங்களூர் பந்த் போராட்டத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து பெங்களூருக்குள் நுழைய இருக்கும் பஸ்கள், லாரிகள் ஒசூர் மற்றும் அத்திப்பள்ளி எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் சில நிறுவனங்கள் விடுப்பு வழங்கி உள்ள நிலையில் சில நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறியுள்ளன.இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெங்களூர் -ஒசூர் சாலை என்பது இன்று ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சில இடங்களில் மட்டும் ரொம்ப ரொம்ப குறைந்த அளவில் சிலர் நடமாடினர். வாகன போக்குவரத்து என்பது ஒசூர் ரோட்டில் முடங்கி உள்ளது. இதனால் தமிழகம்-கர்நாடகா இடையே பயணிக்க விரும்பும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications