பெங்களூர் பந்த்: கன்னட அமைப்புகளுக்குள் அடிதடி. வாட்டாள் நாகராஜ் கோஷ்டி ஆதரவு தர மறுப்பு!
பெங்களூர்: காவிரி நதிநீரை தமிழ்நாட்டுக்கு திறக்க எதிர்ப்பு தெரிவித்து தற்போது நடைபெற்று வரும் பெங்களூர் பந்த் போராட்டத்துக்கு வாட்டாள் நாகராஜ் தலைமையில் பல கன்னட சங்கங்கள் ஆதரவு தர மறுத்துவிட்டன. இதனால் பெங்களூர் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பல சங்கங்கள் திடீரென கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றுள்ளன.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடிநீரைத் திறக்க வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. இதனையே உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

காவிரியில் 24,000 கன அடி நீரை கேட்டது தமிழ்நாடு. இதனை காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்தது. இதற்கு எதிராகவே உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில்தான் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்பதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
மண்டியா பந்த்: ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரையே திறந்துவிடக் கூடாது என கன்னட விவசாயிகள் போராடி வருகின்றனர். மண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர் ஆகிய பகுதிகள் போர்க்களங்களாகவே மாற்றப்பட்டுவிட்டன. மண்டியாவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன் பெங்களூர் மாநகர மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக மண்டியாவில் உள்ள பெங்களூர் குடிநீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பெங்களூர் பந்த்: இதனால் வேறுவழியே இல்லாமல் பெங்களூர் மாநகரமும் இப்போது முழு அடைப்புப் போராட்டம் நடத்துகிறது. விவசாயிகள் சங்கத் தலைவர் குருபூர் சாந்தக்குமார் தலைமையில் பெங்களூர் பந்த் போராட்டம் நடத்தப்படுகிறது. இப்போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் இந்தப் போராட்டத்துக்கு 100க்கு மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
பெங்களூர் பந்த்-க்கு எதிர்ப்பு: ஆனால் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், பெங்களூர் பந்த் நடத்தக் கூடாது; கர்நாடகா தழுவிய பந்த் நடத்துவோம் என்றார். அவரும் தம் பங்குக்கு சில சங்கங்களை சேர்த்துக் கொண்டு செப்டம்பர் 29-ந் தேதி கர்நாடகா பந்த் நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார். அத்துடன் இன்றைய பெங்களூர் பந்த் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வாட்டாள் நாகராஜ் தரப்பு வலியுறுத்தியது. ஆனால் குருபூர் சாந்தக்குமார் தலைமையிலான சங்கங்கள் இதனை ஏற்க மறுத்துவிட்டன.
பெங்களூர் பந்த் ஆதரவு இல்லை: இதனையடுத்து வாட்டாள் நாகராஜுக்கு ஆதரவு தெரிவித்த சங்கங்கள் திடீரென இன்றைய பெங்களூர் பந்த் போராட்டத்துக்கு தெரிவித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளன. உணவக உரிமையாளர் சங்கங்கள் போன்றவை முதலில் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. பின்னர் வாட்டாள் நாகராஜ் கோஷ்டி அச்சுறுத்தலால் இன்றைய பந்த் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.












Click it and Unblock the Notifications