‛முடங்குதே’.. காவிரி பிரச்சனையால் பெங்களூரில் 26ம் தேதி பந்த்! 100க்கும் அதிக அமைப்பு பங்கேற்பு!
பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவதை எதிர்த்து பெங்களூரில் வரும் 26ம் தேதி பந்த் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 100க்கும் அதிகமான அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுவதால் அன்றைய தினம் ஒட்டுமொத்த பெங்களூரும் முடங்க உள்ளது.
தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு செய்வதில் பிரச்சனை உள்ளது. இந்நிலையில் தான் கடந்த திங்கட்கிழமை காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் தமிழகத்துக்கு 15 நாட்கள் 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவிடப்பட்டது.

இதனை எதிர்த்து கர்நாடகா அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதனை கண்டித்து கேஆர்எஸ் அணை இருக்கும் மண்டியா மாவட்டத்தில் இன்று பந்த் நடந்து வருகிறது. கடைகள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது.
அதேபோல் பெங்களூர் நகரிலும் ஆனந்தராவ் சர்க்கிள், சுதந்திர பூங்கா, மைசூர் வங்கி சர்க்கிளில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். காலி குடங்கள், மண்பாணைகளுடன் ஏராளமானவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். அதேபோல் தமிழ்நாடு, கர்நாடகா எல்லையான அத்திபள்ளியிலும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வாகனங்களை தடுக்க முயன்று கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே தான் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்கும் கர்நாடகா அரசை கண்டித்து பெங்களூரில் பந்த் நடத்துவது குறித்து பல்வேறு விவசாய அமைப்புகள், வியாபார சங்கங்கள், கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை 2 மணிநேரம் நடந்தது. ஆலோசனை முடிவில் வரும் 26ம் தேதி பெங்களூரில் பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பெங்களூரில் பள்ளி, கல்லூரிகள், கடைகள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்களை மூட அழைப்பு விடுக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. மேலும் பந்த் போராட்டத்தை வெற்றிகரமாக முடிக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுமார் 100க்கும் அதிகமான அமைப்புகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பந்த்துக்கு ஆதரவு வழங்கும்படி தற்போது பல்வேறு அமைப்புகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.இந்த பந்துக்கும் பாஜக மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி முழு ஆதரவு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications