பெங்களூர் குடிநீர் திட்டம்: காவிரி நீரை எடுக்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு
காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.
பெங்களூர்: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. பெங்களூர் மாநகர திட்டத்திற்கு காவிரியில் இருந்து நீரை எடுக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது இரு மாநிலங்களுக்கு இடையேயும் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது.
காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டத்தில் உள்ள மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே அணை
பெங்களுரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், மின்உற்பத்திக்காகவும் இந்த அணையை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து கர்நாடக அரசு மத்திய ஜல்சக்தி துறை, மத்திய அரசு மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. எனினும், காவிரியின் குறுக்கே அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்துவிடும் என கருதி தமிழ்நாடு இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அழுத்தம் கொடுக்கும் கர்நாடகா
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை அனுமதி எதையும் கொடுக்கவில்லை. இருந்த போதிலும் மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி மத்திய அரசுக்கு தொடர்ந்து கர்நாடக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு
இது ஒருபக்கம் இருக்க பெங்களூர் மாநகர குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கர்நாடக அரசு நீர் எடுப்பதாகவும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காகவும் காவிரி நீரை எடுப்பதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளது.

குடிநீர் வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும்
காவிரிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அளித்த இறுதி தீர்ப்பில் பெங்களுர் நகரத்தில் குடிநீர் தேவைக்காக மட்டும் 4.75 டி.எம்.சி நீரை பயன்படுத்திகொள்ளலாம். குடிநீர் தேவையில்லாத நீரை சுத்திகரித்து மீண்டும் காவிரியில் விட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பெங்களுரு குடிநீர் வடிகால் வாரியம் மீறி செயல்படுகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்ற பெங்களுரு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும்.

நீரின் அளவை கண்காணிக்க
காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் இருந்து எடுக்கப்பட்ட நீரை தேவைக்கு போக மீதமாக இருக்ப்பதை பெங்களுருவுக்கு மாற்றக்கூடாது என குடி நீர் வடிகால் வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும். மீதமுள்ள நீரை முறையாக சுத்திகரித்து காவிரி ஆற்றில் விடுவதற்கு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். பெங்களுரு மாநகரத்தின் குடி நீர் தேவைக்கு எடுக்கப்படும் நீரின் அளவை கண்காணிக்க காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் மனு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய அணைகட்டும் திட்ட பணிகள்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணைகட்டும் திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கர்நாடகாவின் மேகதாது போராட்ட குழு என்ற அமைப்பு, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறது. இந்த போராட்டக் குழு மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தியும் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானம் அருகே இன்று போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

நீரின் தரத்தையும், அளவையும் கண்காணிக்க
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து மனு கொடுக்க இருப்பதாகவும் இந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள இந்த மனு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து குடிநீரின் தேவைக்கு எடுக்கப்பட்டு, நுகர்வு தேவை போக மீதமுள்ள நீரின் தரத்தையும், அளவையும் கண்காணிக்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என அந்த கூடுதல் மனுவில் கோரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications