சக்சஸ்.. முக்கிய கட்டத்திற்கு சென்ற சந்திரயான் 3.. நிலவை நெருங்குகிறது.. இஸ்ரோ வெளியிட்ட குட் நியூஸ்
பெங்களூர்: சந்திரயான் -3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இதுவரை 4 முறை உயர்த்தப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் 5-வது கட்டமாக சந்திரயான் விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. சந்திரயான் சுற்று வட்டப்பாதை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்து இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-2 என்ற விண்கலத்தை கடந்த 2019 ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திரயான்-2 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. இருந்த போதிலும், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.

அதே நேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து இஸ்ரோ ரூ.615 கோடியில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.
சந்திரயான் - 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், அது தனது இறுதி இலக்கினை அடைய பல்வேறு படிநிலைகளை கடக்க வேண்டியிருக்கிறது. அதாவது, நிலவை நோக்கி இந்தியாவின் சாதனைப் பயணத்தை செய்துகொண்டு இருக்கும் சந்திராயன் 3 விண்கலம் பூமியை நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்த பிறகு நிலவின் ஆர்ப்பிட்டுக்கு சென்று அதையும் நீள் வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கி தரையிறங்கும்.
இதுவரை 4 முறை சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் 5-வது கட்டமாக சந்திரயான் விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. சந்திரயான் சுற்று வட்டப்பாதை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்து இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்கலம் 127609 km x 236 km சுற்று வட்டபாதையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கண்காணிப்புக்கு பிறகு இந்த சாதனையின் விவரங்கள் பகிரப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து வெளியேறி நிலவை நோக்கி பயணிக்க தொடங்கும். ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சந்திரயான் செல்லும் எனவும் ஆகஸ்ட் 5-ல் இருந்து 23 ஆம் தேதி வரை நிலவின் சுற்று வட்டபாதைக்குள் பயணிக்கும் சந்திரயான், ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5.47க்கு நிலவில் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கும்.












Click it and Unblock the Notifications