கர்நாடக சட்டசபையில் சலசலப்பு! ஆளுநரை தள்ளிவிட்ட காங்., எம்எல்ஏக்கள்? பாஜக பரபர குற்றச்சாட்டு!
பெங்களூர்: கர்நாடக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில், மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காமல் வெளியேறினார். அப்போது அவரை சூழ்ந்துக்கொண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர். இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆளுநரை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தள்ளிவிட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் ஆளுநர் தவார்சந்த் கெலாட்டிற்கு, ஆளும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களால் இடையூறு செய்யததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. அரசு தயாரித்த உரையைப் படிக்க மறுத்து, ஆளுநர் தனது சொந்த உரையை வாசித்து ஐந்து நிமிடங்களில் வெளியேறியது இந்த மோதலுக்குக் காரணம்.

பாஜக எம்எல்ஏ சுனில் குமார், இந்த விவகாரம் குறித்து கூறுகையில், "ஆளுநர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூச்சல் போட்டு ஆளுநரை அவமதிக்க முயன்றனர்" என்று குற்றம்சாட்டினார். ஆளுநரை அவமதித்த செயலுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாஜக கோரியுள்ளது.
கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், ஆர்.அசோகா, இந்த விவகாரம் குறித்து சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆளுநர் வெளியேறும்போது, அவரை வழிமறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தள்ளி விட்டதாகவும், இவ்வாறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். சட்டமன்ற விதி 27ன் படி, ஆளுநர் உரையின்போதும், அவர் வரும்போதும், போகும்போதும் இடையூறு விளைவிப்பது சபையின் மாண்பை குலைக்கும் செயலாகும்.
இதனை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக கோருகிறது. சம்பவம் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கவும், கர்நாடகாவில் அரசியலமைப்பு சட்டம் முடங்கி விட்டதாக கூறி ஆளுநர் மூலம் அறிக்கையை ரெடி செய்யவும் பாஜக திட்டமிட்டிருக்கிறது.
ஆனால், அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட உரையை நிராகரித்த ஆளுநர், அரசியலமைப்பு விதிகளை மீறி விட்டதாக காங்கிரஸ் விமர்சித்திருக்கிறது. மட்டுமல்லாது, தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது ஆளுநர் அவையிலிருந்து வெளியேறியது அவமரியாதையான செயல் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
கர்நாடக ஆளுநருக்கும், சித்தராமையா தலைமையிலான அரசுக்கும் இடையே மத்திய, மாநிலத் திட்டங்கள் குறித்து வெடித்துள்ள பஞ்சாயத்துகளே இந்த சலசலப்புக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications