இந்திய ஐடி ஊழியர்களுக்கு சீனாவால் புது சவால்.. இனியும் ஆங்கிலத்தை வைத்து நாம் எஸ்கேப் ஆக முடியாது
பெங்களூர்: சீனாவைச் சேர்ந்த நிதி வர்த்தக நிறுவனமான டீப்சீக் (Deepseek), செலவு குறைந்த செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியை உருவாக்கி உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, அமெரிக்காவைப் போன்ற நாடுகளுக்கு போட்டியாக சீனா உருவாகி வருவதை உணர்த்துகிறது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்ட பல தொழில் நுட்ப தலைவர்கள் இந்த வளர்ச்சியைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர். டீப்சீக்கின் இந்த வியக்கத்தக்க உத்தியை ஆராய, ஜூக்கர்பெர்க் இன்ஜினியர் குழுக்களை அமைத்து கண்காணிக்க ஆரம்பித்துள்ளார். ஒபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி போன்ற அதிநவீன ஜெனரேட்டிவ் AI மாதிரிகளை குறைந்த செலவில் அவர்களால் உருவாக்க முடிந்தது ஒரு பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
டீப்சீக்கின் இந்த சாதனை உலகளாவிய தொழில்நுட்பச் சந்தையில் ஒரு திருப்புமுனையாக அமையலாம். ஏனெனில், அதிக செலவு பிடிக்கும் கணினித் திறனுக்கு ஒரு மலிவான மாற்று ஏற்பாட்டை இது வழங்குகிறது. இந்த புதுமை, AI தொழில்நுட்ப ஆயுதப் போட்டியில் சீனாவை முன்னிலைப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் நீண்டகால ஆதிக்கத்திற்கும் சவால் விடுக்கிறது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை, திறமையான, ஆங்கிலம் பேசும் மற்றும் குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களை நம்பியே இதுவரை முன்னணியில் இருந்து வந்துள்ளது. சீனர்களைவிட நாங்கள் குறைந்த சம்பளத்தில் வேலைபார்ப்போம், அருமையாக ஆங்கிலமும் பேசுவோம் என்பதே நமது கை உயர்ந்திருக்க காரணமாக இருந்தது. ஆனால், ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பம் திறன் மற்றும் மொழி தடைகளைத் தகர்த்துவிட்டது. மலிவாகவும் உள்ளது. இது இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் மேலாதிக்கத்திற்கு நேரடி அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
AI தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவைகளை ஆட்டோமேட்டடாக்கும் வாய்ப்பை தருகிறது. இதன் மூலம், திரும்பத் திரும்பச் செய்யும் பணிகளுக்கு குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களை நம்பியிருக்கும் இந்தியாவின் அணுகுமுறை காலாவதியாகும் அபாயம் உள்ளது. டீப்சீக்கின் வெற்றி, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும், புதுமைப்படுத்துவதிலும் பின்தங்கியுள்ளன என்பதையும் சேர்த்தே உணர்த்துகிறது. இதுவரை நாம் பலம் என்று நம்பியது இனி போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்து, இந்திய நிறுவனங்கள் தங்கள் உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இந்தியா கற்க வேண்டிய பாடம்
டீப்சீக் நிறுவனம் செயற்கை நுண்ணறிவை அணுகிய விதம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் (R&D) முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டித்தன்மையை தக்கவைக்க, இந்த பாடத்தை கற்றுக்கொண்டு R&Dக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இருப்பினும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு R&D செலவினம் (GERD) அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1% க்கும் குறைவாகவே உள்ளது. இது, 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி சீனாவின் முதலீடான GDP-யில் 2.43% ஐ விட மிகவும் குறைவு. AI தொழில்நுட்பம் பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்தும் காலத்தில், இந்தியா உள்நாட்டில் உயர் திறமைசாலிகளை வளர்ப்பதிலும், புதுமைப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
எதிர்கால போட்டி
டீப்சீக் போன்ற நிறுவனங்களின் புதுமை, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு நேரடி அச்சுறுத்தலை மட்டுமல்ல, இந்தியா தொழில்நுட்பத் தலைமையைப் பேண தகவமைத்துக்கொள்ளவும், வளரவும் வேண்டும் என்பதற்கான ஒரு எச்சரிக்கை மணியையும் ஒலிக்கிறது. இந்திய நிறுவனங்கள் AI ஒருங்கிணைப்பு மூலம் பணியாளர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், நாட்டிற்குள் உயர் திறமைசாலிகளை அடையாளம் கண்டு தக்கவைத்துக்கொள்வது புதுமையை வளர்ப்பதற்கு மிக முக்கியமானது.
வருங்காலமான குவாண்டம் கணினி மற்றும் AI ஆகிய துறைகளில், அதிலும் குறிப்பாக R&D-யில் கணிசமான முதலீடுகள் செய்வது, உலகளாவிய தொழில்நுட்பப் போட்டியில் இந்தியாவின் நிலையைப் பாதுகாக்க அவசியம். இந்த துறைகளில் முன்னேற்றங்களை அடைய அரசுக்கும் தனியார் துறைக்கும் இடையிலான கூட்டு முயற்சிகள், சிறந்த ஆராய்ச்சியாளர்களை ஈர்க்க மிகவும் முக்கியமானது.












Click it and Unblock the Notifications