பெங்களூரில் மீண்டும் கிரிக்கெட் போட்டி? முதல்வரை சந்தித்த வெங்கடேஷ் பிரசாத்! விரைவில் குட்நியூஸ்
பெங்களூர்: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். இதையடுத்து பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் முக்கிய போட்டிகள் நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் பெங்களூரில் போட்டியை நடத்துவது தொடர்பாக கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக புதிதாக தேர்வாகி உள்ள வெங்கடேஷ் பிரசாத் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
ஐபிஎல்லில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பிறகு கடந்த ஜூன் 4-ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களின் வெற்றி கொண்டாட்டம் பெங்களூரில் நடந்தது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கர்நாடகா கிரிக்கெட் சங்கம், ஆர்சிபி அணி நிர்வாகம் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதோடு, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. போட்டியை நடத்துவதற்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் தான் பெங்களூரில் நடைபெற இருந்த மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
மேலும் அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டி பெங்களூரை விட்டு புனேவுக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையே தான் 2 நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளரை சந்தித்த கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார், ஆர்சிபி போட்டியை பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் இருந்து மாற்றவிடமாட்டோம் என்று கூறினார்.
டிகே சிவக்குமார் கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராக உள்ள நிலையில் அந்த சங்கத்தின் தலைவருக்கான தேர்தலில் ஓட்டளிக்க சென்றபோது இந்த தகவலை தெரிவித்தார். இந்த கர்நாடகா கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவர் தனது நிர்வாகிகளுடன் நேற்று பெலகாவி சென்று முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டும் என்பது தொடர்பாக விவாதித்தார்.
அதன்பிறகு வெங்கடேஷ் பிரசாத் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‛‛கர்நாடகாவில் கிரிக்கெட்டை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெங்களூருவுக்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கும் கிரிக்கெட் கட்டமைப்புகளை விரிவுப்படுத்தப்படும். பெலகாவி, சிவமொக்கா, துமகூரு, உப்பள்ளி பகுதிகளில் கிரிக்கெட் சார்ந்த வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.
பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் முக்கிய போட்டிகளை மீண்டும் நடத்துவது தொடர்பாக முதல்வர், துணை முதல்வரிடம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இன்றைய (நேற்று) சந்திப்பின்போது எங்களின் நிர்வாக குழுவுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளது. சின்னசாமி மைதானத்தில் பார்வையாளர்களுடன் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்தத் தேவையான அனுமதிகளை வழங்குமாறு கேட்டு கொண்டோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications