கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் வன்முறை.. இரு பிரிவினர் மோதலால் 144 தடை உத்தரவு
பெங்களூர்: கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது. அப்போது நாகமங்களா அருகே விநாயகர் ஊர்வலத்தின்போது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை உண்டானது. இதில் சாலைகளில் நின்ற வாகனங்கள், கடைகளுக்கு தீ வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடத்தி பின்பு ஊர்வலமாக கொண்டு என்று நீர்நிலைகளில் கரைத்து வருகிறார்கள். இதேபோன்று கர்நாடக மாநிலத்திலும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தற்போது விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர்.

அப்படித்தான் நேற்று கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் நாகமங்களா பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலமானது பதரிகொப்பா அருகே உள்ள மசூதி அருகே சென்ற போது அங்கு நின்றுகொண்டிருந்த இளைஞர்களுக்கும், விநாயகரை ஊர்வலமாக எடுத்து வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது திடீரென அங்கிருந்த ஒரு பிரிவினர் இந்த ஊர்வலத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு வந்தவர்கள் பதிலுக்கு அவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே சிலர் பெட்ரோல் குண்டை வீசினர்.

பின்னர் சாலைகளில் நின்றிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். மேலும் சாலையோர கடைகளுக்கும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் அவர்கள் செல்லாததால் தடியடி நடத்தினர். இதில் அனைவரும் நாலாபுறமாக சிதறி ஓடினர். இதையடுத்து பதற்றம் உள்ள பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு வந்தவர்கள் நியாயம் கேட்டு போலீஸ் நிலையம் வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதே நேரத்தில் மற்றொரு கும்பல் மண்டியா சர்கிள் பகுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மண்டியா நாகமங்களா பகுதியில் ஏற்பட்ட வன்முறையால் அந்த பகுதிக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டது. இந்த வன்முறையில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications