போய் வாருங்கள் அப்பு.. உணர்ச்சி பொங்க புனித்தின் நெற்றியில் முத்தமிட்டு வழியனுப்பிய முதல்வர் பொம்மை
பெங்களூர்: மாரடைப்பால் காலமான கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமாரின் இறுதிச் சடங்கில் அவரது நெற்றியில் முதல்வர் பசவராஜ் பொம்மை மிகவும் உணர்ச்சி பெருக்குடன் முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார்.
கன்னட பவர் ஸ்டார், அப்பு என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இதுவரை 20 க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். 6 மாத குழந்தையிலிருந்தே நடித்து வந்த புனித் தனது 10ஆவது வயதில் தேசிய விருதை பெற்றார்.
ரசிகர்களுடன் எப்போதும் எந்த பந்தாவும் இல்லாமல் பழகி வந்தததால் புனித்துக்கு பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உண்டு. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

விக்ரம் மருத்துவமனை
இதையடுத்து அவரை பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வரும் போதே சுயநினைவில்லாமல் வந்த அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் சுயநினைவு திரும்பவே இல்லை. இதைத் தொடர்ந்து சிகிச்சை கொடுத்த போதிலும் அவரது பல்ஸ் ரேட்டும் ஆக்ஸிஜன் அளவும் குறைந்து கொண்டே சென்றதை அடுத்து அவரது உயிர் பிரிந்தது.

மூத்த மகள்
இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மூத்த மகள் துருதி அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தார். அவர் வந்ததும் ஞாயிற்றுக்கிழமை புனித்துக்கு இறுதி சடங்குகளை மேற்கொள்ளலாம் என திட்டமிடப்பட்டது. எனினும் துருதி நேற்றைய தினமே வந்துவிட்டார். ஆனாலும் புனித்திற்கு அஞ்சலி செலுத்த ஏராளமான ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்ததால் அவரது இறுதிச் சடங்குகளை இன்றைய தினம் நடத்த திட்டமிட்டனர்.

புனித்தின் இறுதிச் சடங்கு
அதன்படி இன்றைய தினம் கான்டீர்வா ஸ்டுடியோவில் புனித்தின் இறுதி சடங்குகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவரது உடல் கான்டீர்வா மைதானத்திலிருந்து ஸ்டுடியோவுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து புனித்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடியை அவரது மனைவியிடம் ஒப்படைத்தார் முதல்வர் பொம்மை.

முன்னாள் முதல்வர்கள்
இந்த இறுதி சடங்கில் முதல்வர் பொம்மை, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, எடியூரப்பா, நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராஜ்குமார் குடும்பத்தினருடன் ஆரம்ப காலத்திலிருந்தே நட்பு பாராட்டி வரும் பசவராஜ் பொம்மை, புனித்தை சிறு வயது முதலே பார்த்து வந்தார். புனித்திற்கு மாரடைப்பு என தெரிந்ததும் நேராக விக்ரம் மருத்துவமனைக்கு வந்தது முதல் இன்று நல்லடக்கம் வரை புனித்தின் குடும்பத்தினருக்கு தூணாக இருந்து ஆறுதல் அளித்தார்.

முத்தமிட்ட பொம்மை
புனித்தின் உடல் குழிக்குள் வைப்பதற்கு முன்னர் இறுதி மரியாதை செய்வதற்கு சென்ற முதல்வர் பொம்மை முதலில் இரு கைகளையும் கூப்பி வணங்கினார். பின்னர் உணர்ச்சி பெருக்கில் புனித்தின் நெற்றியில் முத்தமிட்டார். இதையடுத்து அவரது உடல் குழிக்குள் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications