அடித்து ஆடும் டி.கே.சிவக்குமார்.. அஸ்திரத்தை எடுத்த சித்தராமையா.. கதி கலங்கும் கர்நாடகா அரசியல்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் பதவிக்காக சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே உச்சகட்ட அதிகார போட்டி நிலவி கொண்டிருக்கிறது. சிவக்குமார் தனக்கு ஆதரவாக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் நிலையில், சித்தராமையா முதலமைச்சர் பதவியை தலித் நிர்வாகிக்கு வழங்க வேண்டும் என்று புதிய புயலை கிளப்பியுள்ளார். பரபரப்பான சூழ்நிலையில் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூர் சென்றுள்ளார். இதனால், கர்நாடகா அரசியலில் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
கர்நாடகாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக தோல்வியடைந்தது. காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் பதவியை பிடிப்பதற்கு சித்தராமையா, டி.கே சிவக்குமாருக்கும் இடையே போட்டி நிலவியது. அப்போது, சித்தராமையா கர்நாடகா முதலமைச்சராகவும், டி.கே.சிவக்குமாரு துணை முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

கர்நாடகா நவம்பர் புரட்சி
இதில், முதலமைச்சர் பதவிக்காக நீண்ட எதிர்பார்ப்பில் இருந்த டி.கே.சிவக்குமார் அப்செட் ஆனார். அதனால் காங்கிரஸ் தலைமை ஒரு ஒப்பந்தம் போட்டது. மொத்தமுள்ள 5 வருட ஆட்சியில் முதல் 2.5 வருடங்கள் சித்தராமையாவும், அடுத்த 2.5 வருடங்கள் டி.கே சிவக்குமாரும் முதலமைச்சர் பதவியில் இருப்பார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.
2025 நவம்பர் மாதத்துடன் காங்கிரஸ் ஆட்சியின் 2.5 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. அதாவது சித்தராமையாவுக்கான காலம் முடிந்துவிட்டதாகவே டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். இதனால் கர்நாடகா அரசியலில் நவம்பர் புரட்சி, பெரிய மாற்றம் இருக்க போகிறது என்று கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தராமையா - கார்கே சந்திப்பு
முதலமைச்சர் பதவியை பிடிப்பதற்காக டி.கே சிவக்குமாரும், முதலமைச்சர் பதவியை தக்க வைப்பதற்காக சித்தராமையாவும் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்கள். சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லி சென்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து சிவக்குமாரை எம்எல்ஏ ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சிவக்குமாரும் தன் வசமுள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார்.
ஆனால், நவம்பர் புரட்சி எல்லாம் ஒன்றுமில்லை. இது ஊடகங்கள் கட்டமைத்த கட்டுக்கதை என்று சித்தராமையா கூறினார். கன்னட அமைப்பு நிர்வாகி வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் சித்தராமையாவுக்கு ஆதரவாக பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூர் சென்றுள்ளார். அவரை சித்தராமையா சந்தித்து பேசியுள்ளார்.
அடித்து ஆடும் சிவக்குமார்
சுமார் 1.30 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. அந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, காங்கிரஸ் உயர்மட்ட குழு என்ன சொல்கிறதோ அதை கடைபிடிப்பேன் என்று கூறியிருந்தார். மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம், "இதில் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. காங்கிரஸ் உயர்மட்ட குழுதான் முடிவு எடுக்கும்." என கூறினார்.
டி.கே.சிவக்குமாரின் தம்பி டி.கே.சுரேஷ் செய்தியாளர்களிடம், "சித்தராமையா தன் வாக்கை காப்பாற்ற வேண்டும்." என்று கூறியுள்ளார். மல்லிகார்ஜுன கார்கேவுடனான சந்திப்பின்போது சித்தராமையா, "அடுத்த 2.5 வருடங்களும் தன்னை முதலமைச்சராக தொடர அனுமதிக்க வேண்டும். தன்னை இந்த பதவியில் இருந்து மாற்றுவதற்கு 25 சீனியர் நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்." என்று கூறியிருக்கிறார்.
ஆட்டத்தை மாற்றும் சித்தராமையா
முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க சித்தராமையா தயாராக இல்லை. மறுபக்கம் சிவக்குமார் தனக்கு ஆதரவாக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து இயக்கம் திரட்டி வருகிறார். சுமார் 50 எம்எல்ஏக்களிடம் கையெழுத்து வாங்க திட்டமிட்டு, தற்போதுவரை சுமார் 35 எம்எல்ஏக்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளார். "இது கட்சியின் நலனுக்கு நல்லதல்ல." என்று சித்தராமையா எடுத்துரைத்துள்ளார்.
சிவக்குமாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சித்தராமையா தரப்பில், கர்நாடகா முதலமைச்சர் பதவி மாற்றப்படுகிறது என்றால் தலித் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும். உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஸ், சமூகநலத்துறை அமைச்சர் மகாதேவப்பா ஆகியோரையும் முதலமைச்சர் ரேஸில் முன்னிலை வகித்துள்ளார்.
உச்சகட்ட பரபரப்பு
இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கர்நாடகாவில் உள்ள மற்ற தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். கர்நாடகா எரிசக்தி துறை அமைச்சர் ஜார்ஜ் சோனியா காந்தி, சித்தராமையா, சிவக்குமார் ஆகிய 3 தரப்பினரிடமும் நல் உறவில் உள்ளார். ஜார்ஜ் - மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து உரையாடியுள்ளனர். அதன் பிறகு சிவக்குமாரும் கார்கேவை சந்தித்துள்ளார்.












Click it and Unblock the Notifications