8 மாதத்தில் தேர்தல்.. மீண்டும் கர்நாடகா முதல்வர் மாற்றம்? கொளுத்திப் போட்ட காங்கிரஸ்!
பெங்களூரு: கர்நாடகாவில் 2023ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மாற்றப்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. முதலமைச்சர் பதவியை மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் குமாரசாமிக்கு காங்கிரஸ் கட்சி விட்டுக்கொடுத்தது. இருந்தும், 2019ல் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை பாஜக பதவி விலக செய்ததையடுத்து, ஜேடியு - காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது.
இதனால் சகலமானவருக்கும்... கர்நாடகா முதல்வர் பசவராஜ் மாற்றம் இல்லை- பதற்றத்துடன் மறுக்கும் பாஜக!
தேர்தல் பணிகள் தீவிரம்
இதனைத்தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் கட்சியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக கடந்த ஆண்டு எடியூரப்பா பதவி விலகினார். பின்னர் கர்நாடகா முதலமைச்சராக பசவராஜ் பொம்மை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் வரும் 2023ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் முக்கியக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
அமித் ஷா பயணம்
இதன் ஒரு பகுதியாக அண்மையில் மத்திய அமைச்சர் அமித் ஷா கர்நாடகாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கர்நாடகா பாஜக சார்பாக செய்யப்பட்டு வந்த தேர்தல் பணிகள் அமித் ஷாவுக்கு திருப்தியளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து முதல்வர் பசவராஜ் பொம்மை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், பயணம் ரத்து செய்யப்பட்டது.
அமைச்சரவை மாற்றம் இல்லை
அதேபோல் கடந்த ஜூலை 24ம் தேதி முதல்வர் பசவராஜ் பொம்மை கர்நாடகா செல்ல திட்டமிட்டிருந்தார். அந்தப் பயணமும், கடைசி நேரத்தில் ரத்தானது. கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி முதல்வராக பதவியேற்ற பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவை, இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை. அதேபோல் கடந்த ஓராண்டில் பசவராஜ் பொம்மை டெல்லிக்கு 12 முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் விமர்சனம்
இதனால் காங்கிரஸ் கட்சி தரப்பில், கர்நாடகா முதல்வரை பாஜக மீண்டும் மாற்றம் செய்ய திட்டமிட்டு வருகிறது. பசவராஜ் பொம்மை பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவரின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக விமர்சித்துள்ளது.