அடித்து நொறுக்கும் காங்கிரஸ்.. கர்நாடக மக்களுக்கு பிரியங்கா காந்தி சொன்ன மெசேஜ்! ட்வீட்டை பாருங்க
பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வரை முடிவுகள் வெளியாகியுள்ள தொகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் தொகுதிகளிலும் அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் வெற்றி குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்வீட் செய்திருக்கிறார்.
தென்னிந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கும் இந்த மாநிலத்தில் 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. இப்படி இருக்கையில் இடையில் சில எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் ஆட்சி பாஜக வசம் சென்றது.

பாஜக கர்நாடகாவில் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற பின்னர் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. விடுதலை போராட்ட வீரர் திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழா கொண்டாடுவதை கைவிடுவது, ஹிஜாப் அனுமதி மறுப்பு, ரயில் நிலையங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் மசூதி போல இருப்பதாக கூறி அக்கட்டிடங்களை மாற்ற வைத்தது, மிக முக்கியமாக அரசு திட்டங்களை டென்டர் எடுப்பவர்களிடம் 40 சதவிகிதம் கமிஷன் கேட்டது உள்ளிட்டவை பெரும் கர்நாடகா முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சமீபத்தில் 224 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலில் 2,427 ஆண்கள், 184 பெண்கள் மற்றும் 2 மாற்று பாலினத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 2,613 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கினர். இதில் பாஜக சார்பில் 224, காங்கிரஸ் சார்பில் 223, மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் 207, ஆம் ஆத்மி 209, பகுஜன் சமாஜ்வாடி கட்சி 133, சிபிஎம் 4, ஜனதா தளம் 8, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியிலிருந்து 685 பேர் மற்றும் சுயேட்சையாக 918 பேர் போட்டியிட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை 5.31 கோடியாகும். இதில் 16 லட்சம் பேர் முதல் தலைமுறை வாக்காளர்களாவார்கள். இவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. ஆக இப்படியாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை 8 மணி முதல் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தொடக்கம் முதல் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர். சில இடங்களில் வெற்றியும் உறுதி செய்யப்பட்டது.
நேரம் செல்ல செல்ல காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றி அதிகரித்துக்கொண்டே வந்தது. பிற்பகல் நிலவரப்படி மொத்தம் 46 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 29 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கிறது. மொத்தமாக எண்ணப்பட்டு வரும் வாக்குகளின்படி காங்கிரஸ் 133 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. பாஜக 65 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 21 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. இந்த தேர்தலில் மொத்தமாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க 113 தொகுதி ஜெயித்தால் போதுமானதாகும்.
இந்நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தல் வெற்றியை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். எதிர்க்கட்சிகளான திமுக, சிபிஐ, திரினாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ள ட்வீட் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது, "கர்நாடக மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்படும்" என்று கூறியுள்ளார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி,
"பெருமுதலளி நண்பர்களுக்கான முதலளித்துவ சக்தியை ஏழை மக்கள் தோற்கடித்துவிட்டனர். இது இனி ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்தேறும். காங்கிரஸ் ஏழை மக்களுடன் நிற்கிறது. நாங்கள் வெறுப்பை தூண்டி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. கர்நாடகாவில் வெறுப்பு கடைகள் அடைக்கப்பட்டடுவிட்டன. அன்புக்கான கடைகள் திறக்கப்பட்டுள்ளன" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications