கர்நாடக சட்ட மேலவை தேர்தலில் மாஜி முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை களமிறக்கிய காங்கிரஸ்!
பெங்களூர்: கர்நாடகா சட்ட மேலவை இடைத்தேர்தலில் மாஜி முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உட்பட 3 பேரைக் காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் மே மாதம் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியைப் பிடித்திருந்தது. அதற்கு முன்பு வரை அங்கே பாஜக ஆட்சியே நடந்து வந்த நிலையில், தேர்தலில் பாஜக சார்பில் பல சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது.
அப்படி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் ஜெகதீஷ் ஷெட்டர். இவர் கர்நாடக மாஜி முதல்வராகவும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். இருப்பினும், பாஜக சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு தரவில்லை.'

ஜெகதீஷ் ஷெட்டர்: இதையடுத்து மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்கு சில காலம் முன்பு அவர், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் ஐக்கியமானார். கர்நாடக சட்டசபைத் தேர்தலில் ஹூப்ளி-தர்வாட்-சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. சித்தராமையா முதல்வராகப் பொறுப்பேற்றார். இருந்த போதிலும், ஜெகதீஷ் ஷெட்டர் சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்திருந்தார்.
மேலவை தேர்தல்: இதற்கிடையே இப்போது அங்கே சட்ட மேலவைக்கு இடைத்தேர்தல் வரும் ஜூன் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே மாஜி முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது. அவர் மட்டுமின்றி இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திப்பண்ணப்பா கமக்னூர் மற்றும் என்எஸ் போசராஜு ஆகியோரும் போட்டியிடுவார்கள் எனக் காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையிலும், இதுவரை பாஜக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. கடந்த மே மாதம் சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் லட்சுமண் சவடி, பாபுராவ் சிஞ்சன்சூர் மற்றும் ஆர் சங்கர் ஆகியோர் தங்கள் எம்எல்சி பதவிக்கு ராஜினாமா செய்தனர். இந்த இடங்களை நிரப்பவே இப்போது சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
சட்டசபைத் தேர்தல்: தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் ஐக்கியமான ஷெட்டர் ஹுப்பள்ளி - தார்வாட் சென்டிரல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கினார். இருப்பினும், 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அவரால் 36.31 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. அவர் இந்தத் தேர்தலில் பாஜகவின் மகேஷ் தெங்கினகையிடம் தோல்வியடைந்தார்.
இருப்பினும், காங்கிரஸ் கட்சி அவருக்கு ஒரு முக்கிய பொறுப்பை வழங்கும் என்றே கூறப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது அவர் எம்எல்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் 135 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜகவால் 66 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அதேபோல ஜேடிஎஸ் கட்சியும் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.












Click it and Unblock the Notifications