40% கமிஷன்.. கர்நாடக முதல்வருக்கு எதிராக PayCM போஸ்டர்.. பெங்களூரில் கிழித்து அகற்ற அதிரடி உத்தரவு
பெங்களூர்: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக 40 சதவீத கமிஷன் என்ற பெயரில் அவரது போட்டோவுடன் QR கோட் வசதியுடன் காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூரில் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையான நிலையில் அதனை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். இந்நிலையில் தான் பசவராஜ் பொம்மை முதல்வராக ஆனதில் இருந்து கர்நாடகா தொடர்பாக சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.
ஹிஜாப் விவகாரம், முஸ்லிம் வியாபாரிகளை கோவில்களில் கடை அமைக்க விடாமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. மேலும் பசவராஜ் பொம்மையின் அரசு 40 சதவீத கமிஷன் பெற்று ஊழலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
6 மாத கர்ப்பிணி தற்கொலை.. பயத்தில் தூக்கில் தொங்கிய மாமியார்.. அதிர வைத்த காரணம்.. என்ன நடந்தது?
காங்கிரஸ் கட்சியின் இணையதளம்
இந்த கமிஷன் குற்றச்சாட்டு தான் தற்போது பாஜக அரசுக்கு பெரும் பிரச்சனையாக உருவாகி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அதோடு பாஜக அரசின் ஊழல், கமிஷன் தொடர்பாக புகார் அளிக்க ‛40 சதவீத கமிஷன் அரசு' எனும் பெயரில் 40percentsarkara.com இணையதளத்தை காங்கிரஸ் கட்சி துவங்கி உள்ளது. மேலும் 8447704040 என்ற எண்ணையும் அறிமுகம் செய்துள்ளது.
PayCM போஸ்டர்
இதன் தொடர்ச்சியாக நேற்று பேடிஎம் ஸ்கேனர் போன்று PayCM எனும் தலைப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் படத்துடன் பெங்களூரின் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியின் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதில் அரசு சார்பில் 40 சதவீத கமிஷன் ஏற்றுக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் பசவராஜ் பொம்மையின் படம் QR கோட் வடிவில் உள்ளது. இதனை செல்போனில் ஸ்கேன் செய்தால் பாஜக அரசின் ஊழல் தொடர்பான புகாருக்காக காங்கிரஸ் கட்சி துவங்கிய இணையதளத்துக்கு செல்கிறது.
போஸ்டர்களை கிழிக்க உத்தரவு
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த போஸ்டரை தற்போது பாஜகவினர் கிழிக்க தொடங்கினர். மேலும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் போஸ்டர்களை கிழிக்க வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஊழியர்கள் போஸ்டர் கிழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கர்நாடகத்தல் ஆளும் பாஜக-காங்கிரஸ் கட்சியினர் இடையே தற்போது வார்த்தைப்போர் வெடித்துள்ளது.
பெங்களூர் போலீஸ் நடவடிக்கை
இந்த போஸ்டர் குறித்து பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி கூறுகையில், ‛‛பெங்களூரில் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.