கர்நாடகா: 14 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு ஓகே.. பெங்களூர் நிலைமை என்ன தெரியுமா?
பெங்களூர்: கர்நாடக அரசு இன்று, மேலும் சில மாவட்டங்களில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள தொழில்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது. லாக்டவுன் தளர்வு ஆக மொத்தம் 14 மாவட்டங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பெங்களூரில் இப்போதுள்ள கட்டுப்பாடு தொடரும் என்பதால், அங்கு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கொடுக்கப்படவில்லை.
சாமராஜ்நகர், கொப்பல், சிக்மகளூரு, ராய்ச்சூர், சித்ரதுர்கா, ராம்நகரா, ஹாசன், சிவமோகா, ஹாவேரி, யாதகிரி, கோலார், தாவணகெரே, உடுப்பி மற்றும் குடகு ஆகிய 14 மாவட்டங்களுக்கும் இந்த ஊரடங்கு தளர்வு பொருந்தும்.
இம்மாவட்டங்களிலும், கிராமப்புறங்களில் அமைந்துள்ள தொழில்கள் செயல்படலாம். மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் எல்லைகளுக்குள் அமைந்துள்ள தொழில்கள் இயங்க அனுமதியில்லை.

ராம் நகரம் முழு ஃப்ரீ
ராம்நகரத்தில், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் எல்லைக்குள் அமைந்துள்ள தொழில்கள் செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஏனெனில், ஆரம்பம் முதலே இந்த மாவட்டத்தில் ஒரு நோயாளியும் கிடையாது என்பதுதான் காரணம். மேலும் இது பெங்களூரின் அண்டை மாவட்டமாகும். நிறைய தொழில் நிறுவனங்கள் அங்கே செயல்படுகின்றன.

பெங்களூர்
பெங்களூர் நகரம் மாவட்டம், பெல்லாரி மண்டியா, பெங்களூர் ஊரக மாவட்டம், கதக், தும்கூர், சிக்பல்லாபூர், உத்தர கனடா, தார்வாட் ஆகிய மாவட்டங்களில், கொரோனா இல்லாத தாலுகாக்களில் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை திறப்பது தொடர்பான முடிவை, மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் எடுத்துக்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் ஊரடங்கு தொடரும்
தற்போதுள்ள ஊரடங்கு விதிமுறைகள், பெங்களூர் நகரம், பெலகாவி, மைசூரு, தட்சின கன்னடா, விஜயபுரா, பாகல்கோட், கல்புர்கி மற்றும் பீதர் ஆகிய ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் தொடரும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலம்
தலைமைச் செயலாளர் டி.எம். விஜய் பாஸ்கர் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பகுதியில் அமைந்துள்ள ஆலைகள், ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள், இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்துறை டவுன்ஷிப்களில் கட்டுப்பாட்டுடன் உற்பத்தி மற்றும் பிற தொழில்துறை நிறுவனங்கள் இந்த 14 மாவட்டங்களில் தங்கள் செயல்பாடுகளை தொடங்கலாம்.

தொழிலாளர் பாதுகாப்பு
இந்த தொழில்துறை நிறுவனங்கள் தொழிலாளர்கள் தங்கள் வளாகத்திற்குள் தங்க வைக்க வேண்டும் அல்லது அருகிலுள்ள கட்டிடங்களில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தொழிலாளர்கள் பணியிடங்களுக்கு கொண்டு செல்வது, சமூக தூரத்தை உறுதி செய்யும் பணிகள் போன்றவை நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications