கிடு கிடுவென உயரும் கொரோனா.. மாஸ்க் போடுங்க.. சமூக இடைவெளியை பின்பற்றுங்க! கர்நாடக அரசு அட்வைஸ்
பெங்களூர்: கர்நாடகாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. ஒன்று இரண்டு பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வந்த நிலையில் திடீரென கிடு கிடுவென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால, பொது இடங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி அவசியம் என்று கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் எனினும் அரசு கூறும் நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதி கலங்க வைத்தது. இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு, அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு என பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்தனர்.

திடீரென உயர்ந்து வரும் கொரோனா
தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ்கள் உருமாறி மீண்டும் அவ்வப்போது மக்கள் மத்தியில் பரவி வருகிறது. எனினும், பெரிய அளவில் வீரியம் இல்லாததால் பாதிப்புகள் பெரிதாக இல்லை. இந்த நிலையில் தான், கொரோனா பாதிப்பு பல்வேறு நாடுகளில் சற்று அச்சப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்தியாவையும் இது விட்டுவைக்கவில்லை. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. டெல்லி, கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசங்களில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். பாதிப்பு அதிகரித்து வருவதால் அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறர்கள்.
ஒரு வாரத்துக்குள் பலமடங்கு அதிகம்
தற்போது பரவும் வைரஸின் தீவிரம் குறைவானது என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் பெரும்பாலானோருக்கு வீட்டிலேயே சரியாகிவிடும் என்று அதிகாரிகள் கூறினர். கடந்த மே 22 ஆம் தேதி 257 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கிட்டதட்ட ஒரு வாரத்திற்குள் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 3,395 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் 1,336, மகாராஷ்டிரா 467, டெல்லி, 375, குஜராத் 265, கர்நாடகா 23, மேற்கு வங்கம் 205, தமிழ்நாடு 105, உத்தர பிரதேசம் 117 என கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியிருப்பதால் முகக் கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. அந்த வகையில் கர்நாடக அரசு பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
மாஸ்க், சமூக இடைவெளி
அதாவது கூட்டமான இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கொரோனா வைரஸ் பரவல் குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் தயங்காமல் அவர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications