கர்நாடகா: 'ஒக்கலிகா’ சிடிரவி மாநில பாஜக தலைவர்- ‘லிங்காயத்’ பசனகவுடா யத்னால் எதிர்க்கட்சி தலைவர்?
பெங்களூர்: லோக்சபா தேர்தலுக்காக கர்நாடகா மாநில பாஜக தலைவராக ஒக்கலிகா கவுடா ஜாதியை சேர்ந்த சி.டி.ரவியையும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக லிங்காயத் ஜாதியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னாலையும் நியமிக்க அக்கட்சி மேலிடம் வியூகம் வகுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் மட்டும்தான் பாஜக ஆட்சியில் இருந்தது. அதுவும் முந்தைய மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை பிடித்தது பாஜக. ஆனால் அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் கட்சி மிகப் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. கர்நாடகா தேர்தலில் ஒக்கலிகா ஜாதி வாக்குகளை காங்கிரஸ் பெருமளவு அறுவடை செய்தது. அதேபோல பாஜகவின் வாக்கு வங்கியான லிங்காயத் ஜாதி வாக்குகளும் சிதறிப் போனது.

குமாரசாமி கட்சி: இதனையடுத்து லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் கணிசமான அறுவடையை செய்ய பாஜக படுதீவிரமாக முயற்சித்து வருகிறது. இதன் முதல் கட்டமாக ஒக்கலிகா ஜாதி வாக்குகளை மட்டுமே நம்பி இருக்கிற குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் நேரடியாகவோ, மறைமுகமுகாவோ கூட்டணி அமைப்பது என்பதில் உறுதியாக இருக்கிறது பாஜக. இது தொடர்பாக குமாரசாமி, தேவகவுடா முரண்பட்ட கருத்துகளை தெரிவித்தாலும் அக்கட்சி, பாஜகவுடன் திரைமறைவாகவேனும் கை கோர்த்துதான் ஆகும் நிலைமை உள்ளது.
ஒக்கலிகா: 2-வதாக கட்சி கட்டமைப்புகளில் ஜாதிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்கிற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது பாஜக. கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவடைந்து 3 மாதங்களாகியும் ஒரு சட்டசபை கூட்டத் தொடர் நடந்து முடிந்தும் கூட எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க முடியாத நிலையில் உட்கட்சி மோதல்களில் பாஜக திணறி வருவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனையடுத்துதான் பாஜக தேசிய நிர்வாக கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டதில் சிடி ரவிக்கு பாஜக பொதுச்செயலாளர் பதவி மீண்டும் தரப்படவில்லை. அதாவது சிடி ரவி பாஜக பொதுச் செயலாளராக இருக்கிறார்; தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளராகவும் இருக்கிறார். தற்போது சிடி ரவி இப்பதவிகளில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். இதனால் கர்நாடகா மாநில பாஜக தலைவராக சிடி ரவி நியமிக்கப்படுவது உறுதியாகி உள்ளது. சிடி ரவி ஒக்கலிகா கவுடா ஜாதியை சேர்ந்தவர்; காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான துணை முதல்வர் டிகே சிவகுமார் ஒக்கலிகா கவுடா ஜாதியை சேர்ந்தவர். இதனால் சிடி ரவி மூலம் காங்கிரஸுக்கு செக் வைக்க முடியும் என்பது பாஜகவின் கணக்கு.
லிங்காயத்: கர்நாடகா தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகளில் மற்றொரு முக்கியமான ஜாதி லிங்காயத். ஒக்கலிகா கவுடா ஜாதியின் சிடி ரவிக்கு மாநில பாஜக தலைவர் பதவி தரப்படும் நிலையில் லிங்காயத் ஜாதியின் பசனகவுடா பட்டீல் யத்னால், மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் லிங்காயத் ஜாதி வாக்குகளையும் பெற முடியும் என கணக்குப் போடுகிறதாம் பாஜக. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications