கர்நாடகத்தை உலுக்கிய வழக்கு.. வீடியோ போட்டு சர்ச்சையில் சிக்கிய யூடியூபர்.. ரூ.35 லட்சம் லஞ்சம்?
பெங்களூர்: கர்நாடகாவை உலுக்கிய 17 வயது கல்லூரி மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக வீடியோ வெளியிட்ட யூடியூபர் ஷமீர் எம்டி சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ அதிக பார்வையை கடந்த நிலையில் தற்போது அந்த வீடியோ மாயமாகி உள்ளதோடு, அவர் வீடியோவுக்காக ரூ.35 லட்சம் லஞ்சம் வாங்கி உள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் ஷமீர் எம்டி. இவர் Dhoottha: Sameer MD என்ற பெயரில் யூடியூப் நடத்தி வருகிறார். இவருக்கு மொத்தம் 601K சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

இவர் கர்நாடகாவில் நடக்கும் குற்றசம்பவங்களின் பின்னணி குறித்த விபரங்களை விளக்கமாக கூறி வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இன்வெஸ்டிகேஷன் ஜானலிசம் பாணியில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இதனால் அவருக்கு நாள்தோறும் பாலோயர்ஸ்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது ஷமீர் எம்டி சர்ச்சையில் உள்ளார். அதாவது கடந்த 4ம் தேதி ஷமீர் எம்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ என்பது தர்மஸ்தலா கல்லூரியில் படித்த 17 வயது மாணவி தொடர்பானது. அந்த மாணவி கடந்த 2012ம் ஆண்டில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பற்றி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார் ஷமீர் எம்டி. இந்த வழக்கின் முழு பின்னணியை அறிய வேண்டும் என்றால் நாம் கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதிக்கு செல்ல வேண்டும். உஜ்ரி பகுதியில் உள்ள கல்லூரி படிக்கும் 17 வயது மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த ழக்கில் சந்தோஷ் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு வழக்கு விசாரணையில் சந்தோஷ் ராவ் என்பவர் விடுவிக்கப்பட்டார்.
இதனால் இந்த வழக்கில் குற்றம் செய்தவர் யார் என்பது இன்னும் தெரியாமல் உள்ளது. இப்படியான சூழலில் தான் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று மாணவியின் தந்தையான ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர் சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதோடு சிபிஐ விசாரணைக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரணை தேவையில்லை. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டிய தேவையும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை கர்நாடகா உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பித்தது. இதுதொடர்பாக ஷமீர் எம்டி யூடியூப்பில் கடந்த 4ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோ அதிக பார்வையை பெற்றது. இந்த வீடியோ விவாதத்தை கிளப்பியது. இதற்கிடையே தான் அந்த வீடியோ திடீரென்று அவரது யூடியூப் சேனலில் இருந்து மாயமானது. சிலர் விபிஎன் மூலம் வீடியோ பார்க்க முடிகிறது என்று கூறிவருகின்றனர். அதேவேளையில் பெரும்பாலானவர்கள் அந்த வீடியோவை பார்க்க முடியவில்லை என்று கூறி வருகின்றனர். இதனால் ஷமீர் எம்டி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தான் ஷமீர் எம்டி சிக்கலில் சிக்கி உள்ளார்.
இதுதொடர்பாக ஷமீர் எம்டி, ‛‛நெட்டிசன்கள் ஏன் ஒரு விஷயத்தில் ஜாதி, மதத்தை இழுக்கின்றனர். எனது செல்போன் எண் மற்றும் வீட்டு விலாசத்தை அறிந்து சிலர் என்னை தேடி அலைகின்றனர். இதனால் எனக்கு என்ன ஆகும் என்பது தெரியவில்லை. இதற்கு அனைத்து கண்டென்ட் கிரியேட்டர்களும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். கன்னட யூடியூபர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆதரவு தர வேண்டும்.
மேலும் கவுடா குடும்பத்தை ஆதரவு தெரிவித்து பக்கங்கள் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. சவுஜன்யா வழக்கு தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்ய நான் ரூ.35 லட்சம் லஞ்சம் பெற்றதாக தகவல்களை பரப்பி வருகின்றனர். நான் ஒருபோதும் லஞ்சம் வாங்கவில்லை. எனது எடிட்டருக்கே சம்பளம் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. ஆனால் புதிய பிரச்சனையை ஏன் கிளப்பி விடுகின்றனர்?'' என்று கூறியுள்ளார். இது தற்போது கர்நாடகாவில் விவாதமாகி வருகிறது.












Click it and Unblock the Notifications