தர்மஸ்தலா வழக்கு.. குற்றச்சாட்டு பொய்யாக இருந்தால் கடும் நடவடிக்கை - கர்நாடக உள்துறை அமைச்சர்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் தர்மஸ்தலா வழக்கு பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் பொய்யாக இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் எச்சரித்திருக்கிறார்.
காங்கிரஸ் அரசு தர்மஸ்தலாவை வேண்டுமென்றே குறிவைத்து, சமூகத்தின் ஒரு பிரிவினரின் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்று கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் விமர்சித்திருந்தனர். இதற்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, குற்றச்சாட்டுகள் பொய்யாக இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என் எச்சரித்துள்ளார்.

"உள்துறை அமைச்சராக நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் எந்த அழுத்தத்திற்கும் அடிபணியவில்லை, ஒருபோதும் அடிபணியவும் மாட்டோம். உண்மை வெளிவர வேண்டும். குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டாமா? SIT சரியான திசையில் செயல்படுகிறது. புகார் அளித்தவரின் கூற்றுக்கள் பொய்யாக இருந்தால், சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்" என்று கறாராக கூறியிருக்கிறார்.
எல்லாம் ஓகேதான் ஆனால், இந்த விவகாரம் குறித்து மாநில அரசுக்கு எதிராகப் பெண்கள் தெருக்களில் இறங்குவார்கள் என்று பாஜக எம்எல்ஏக்கள் எச்சரித்தனர். இதற்கு விளக்கமளித்த அமைச்சர், "இந்த வழக்கை அரசியல் அல்லது மத ரீதியாகத் திரித்துக் கூற வேண்டாம். அரசு என்ன தவறு செய்தது? நாங்கள் உண்மையை வெளிக்கொண்டுவரவே விரும்புகிறோம். SIT தலைவரிடம் நானும், முதல்வரும், துணை முதல்வரும் தொடர்ந்து பேசி வருகிறோம்" என்று அவர் தெளிவுபடுத்தினார்.
சில இடதுசாரி அமைப்புகளின் அழுத்தத்தால் அரசு SIT அமைத்ததாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக மக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவார்கள் என்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர்.
தர்மஸ்தலா கோயில் மற்றும் அதன் தர்மாதிகாரி டி. வீரேந்திர ஹெக்கடே மீது தனக்கு மிகுந்த மரியாதை உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், டாக்டர் ஹெக்கடே தலைமையிலான தர்மஸ்தலா கோயில் நிர்வாகம், சுயஉதவி குழுக்கள் மூலம் லட்சக்கணக்கான பெண்களுக்கு நிதியுதவி அளித்து அதிகாரமளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர்களான அரவிந்த் பெல்லாடு, பி.ஒய். விஜயேந்திரா, எஸ்.ஆர். விஸ்வநாத், ஆரக ஞானேந்திரா மற்றும் பலர் இந்த விவகாரம் தொடர்பாக அரசு மீது கடுமையான விமர்சனங்களை அடுக்கியிருந்தனர். முன்னதாக கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், இந்த வழக்கில் சதி நடந்திருக்கிறது என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications