அப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. நாளையே இணைப்பு
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பாஜகவில் நாளை இணைவதற்கு திட்டமிட்டுள்ளனர் இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முதல்வர் எடியூரப்பா மேற்கொண்டு வருகிறார்.
கர்நாடகாவில், குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14, மஜதவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இவர்களை, கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இந்த வழக்கில், இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி தகுதி நீக்கம் செய்தது செல்லுபடியாகும் என்ற போதிலும், இடைத்தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு தடை இல்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது ஒருவகையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், விரும்பிய தீர்ப்புதான். ஏனெனில் அவர்களும் தங்கள் தாய் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய வேண்டும் என்ற திட்டத்துடன் தான் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக கூறப்பட்டது. இப்போது இடைத்தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்பதால் உடனடியாக பாஜகவில் இணைந்து வரும் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தீர்ப்பு வெளியாகி சில நிமிடங்களிலேயே பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தியுள்ளார்.
17 பேரையும் டெல்லியில் வைத்து பாஜகவில் இணைத்துக் கொள்ளலாமா? அல்லது பெங்களூரில் வைத்து இணைத்துக் கொள்ளலாமா? என்பது தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளது. மேலும், கர்நாடக அட்வகேட் ஜெனரலை அழைத்து, முதல்வர் எடியூரப்பா இதில் உள்ள சட்ட சிக்கல்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுவரை, இந்த தகுதி நீக்கத்திற்குள்ளான, எம்எல்ஏக்கள் எந்த கட்சியில் இருந்து இடை தேர்தலில் போட்டியிடப் போகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆலோசித்து முடிவெடுப்போம், என்று கூறி வருகின்றனர். ஆனால் டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய, கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணன், 17 பேரும் நாளையே பாஜகவில் சேர உள்ளனர் என்று அறிவித்தார்.
இதனிடையே, கோலாரில் நிருபர்களிடம் பேசிய, முன்னாள் சபாநாயகர், ரமேஷ்குமார், அரசியல், தார்மீகம் குறித்து பேசும், பிரதமர் மோடி, இதுபோல கட்சி தாவிகளை, பாஜகவில் சேர்க்க கூடாது என்று, கோரிக்கைவிடுத்தார்.












Click it and Unblock the Notifications