யாரு பெரிய ஆளு.. அடிச்சி காட்டு! காந்திகளுக்கு ஐஸ்.. சிவக்குமார் - சித்தராமையா அக்கப்போர் ஆரம்பம்
பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்ட நிலையில், முதலமைச்சர் பதவியை பெறுவதற்காக காங்கிரஸ் மேலிடத்தை ஐஸ் வைக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவும், காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமாரும்.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு கடந்த மே 10 ஆம் தேதி நடைபெற்று இன்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இது வரை வெளியான முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களில் வெற்றிபெற்று இருக்கிறது. மேலும் 23 இடங்களில் முன்னிலையும் வகித்து வருகிறது.

அதேபோல் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 53 இடங்களில் வெற்றிபெற்று உள்ளது. 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 10 இடங்களில் வெற்றியும் 11 இடங்களில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதர வேட்பாளர்கள் 2 இடங்களிலும் வெற்றியும், 2 இடங்களில் முன்னிலையும் வகித்து வருகிறார்கள்.
இதுவரை வெளியான முடிவுகளின்படி கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற பேச்சு எழுந்து உள்ளது. இதில் மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவும், காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமாருக்கும் இடையே முதலமைச்சர் பதவிக்கான போட்டி இருக்கிறது.
நேற்றைய தினம் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது வீட்டிலேயே டிகே சிவக்குமார் சந்தித்து பேசி இருந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக நாளை காங்கிரஸ் கட்சி ஆலோசனைக்கு அழைத்து இருக்கிறது. அதே நேரம் சித்தராமையாவே கர்நாடக முதலமைச்சராக வேண்டும் என அவரது மகன் யதிந்திரா பேட்டியும் அளித்தார்.
அதில், "ஒரு மகனாக எனது தந்தை சித்தராமையாவை இந்த முறையும் முதலமைச்சராக பார்க்க ஆசைப்படுகிறேன். அவர் முதலமைச்சராக பதவியேற்றால், பாஜக ஆட்சியில் நிலவிய ஊழலை ஒழித்துக்கட்டுவார். பாஜக ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட குழப்பங்களை சரிகட்டுவார்." என்று அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகிய இரு தலைவர்களும் காங்கிரஸ் தலைமையை ஐஸ் வைக்கும் வேலையில் இறங்கிவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை அடைந்தது தொடர்பாக இரு தலைவர்களும் காந்தி குடும்பத்தினரை போற்றி பாராட்டத் தொடங்கி உள்ளார்கள்.
தேர்தலில் வென்றவுடன் கண்ணீர்விட்டு அழுத டிகே சிவக்குமார், சிறையில் தான் அடைக்கப்பட்டு இருந்த நாட்களை நினைவுகூர்ந்து பேசினார். அப்போது சோனியா காந்தி தன்னை சிறையில் வந்து சந்தித்தது பற்றியும் அவர் பேசினார். இதேபோல் சித்தராமையாவும் ராகுல் காந்தியை பாராட்டி பேசி உள்ளார். பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி வருவார் என்ற கருத்தை அவர் முன்வைத்து உள்ளார்.












Click it and Unblock the Notifications