“சொந்தமா கார் இல்லைன்னா.. கல்யாணமே நடக்காது!” இதுதான் பெங்களூர்! கவனம் பெற்ற டி.கே.சிவகுமார் பேச்சு
பெங்களூர்: "இப்போ எல்லாம் சொந்தமாக கார் இல்லாத இளைஞர்களை யாரும் திருமணம் செய்துக்கொள்ள தயாராக இல்லை" என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
உலக அளவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நகரங்களில் பெங்களூரும் ஒன்று. இங்கு 10 கி.மீ தூரத்தை கடக்க 30 நிமிடம் 10 விநாடிகள் ஆகும். பெங்களூர் வாசிகள் ஒவ்வொருவரும், ஆண்டுதோறும் சுமார் 117 மணி நேரத்தை போக்குவரத்து நெரிசலில் வேஸ்ட் செய்கின்றனர். எனவே இந்நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கிறது.

இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், துணை முதல்வர் சிவகுமார் சுரங்கப்பாதை திட்டத்தை முன்மொழிந்திருந்தார். ஹெப்பல் தொடங்கி சென்ட்ரல் சில்க் போர்டு வரை சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்றும், இதில் 22 என்ட்ரி மற்றும் எக்ஸிட்கள் இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். தற்போது இந்த இரண்டு இடங்களுக்கான பயண தூரம் 90 நிமிடம். இதுவே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால் பயண நேரம் வெறும் 20 நிமிடங்களாக குறையும்.
ஆனால், இந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், எனவே இந்த திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மட்டுமல்லாது சுரங்கப்பாதை திட்டத்தை அமல்படுத்துவதற்கு பதில், பொதுப்போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து நேற்று சிவகுமாரை சந்தித்து நேரிலும் வலியுறுத்தியிருந்தார். இதன் பின்னர், சிவகுமார் அளித்த பேட்டி கவனம் பெற்றிருக்கிறது.
அதாவது, பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதால் தனி நபர்களின் வாகன பயன்பாடு குறையும் என்பதை சிவகுமார் ஏற்க மறுத்துள்ளார். "தேஜஸ்வி சூர்யா அவரது காரில் வருகிறார். அதை என்னால் தடுக்க முடியுமா? இது சமூக பொறுப்புணர்வு சார்ந்த விஷயம். மக்கள் தங்கள் குடும்பங்களுடன் தங்களது சொந்த வாகனங்களில் பயணிக்க விரும்புகிறார்கள். அவர்கள் கார்களை பயன்படுத்துவதை தடுக்க முடியுமா? வேண்டுமெனில் எம்பிக்கள் தங்கள் வாக்காளர்களை சொந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும், பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தலாம். அப்படி வலியுறுத்தியும் எத்தனை பேர் அதை பின்பற்றகிறார்கள் என்பதை பார்ப்போம்.
இன்றைய காலக்கட்டத்தில் சொந்தமாக கார் இல்லாத பையனை திருமணம் செய்ய, மக்கள் தயங்குகிறார்கள். இதுபோன்ற சமூக யதார்த்தம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு தேவை" என்று கூறியிருக்கிறார்.
சிவகுமாரின் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. ஏர் இந்தியாவை விற்றதன் மூலம் சொந்தமாக விமான சேவை இல்லாத அரசாக பாஜக தலைமையிலான மத்திய அரசு மாறியிருக்கிறது. இப்படியான பாஜக, பொது போக்குவரத்து குறித்து பேசலாமா? என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். உண்மையில் பொது போக்குவரத்து, காற்று மாசடைவதையும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் உதவும் என்றும், ஆனால் கார் போன்ற தனியார் வாகன விற்பனையை காங்கிரஸும், பாஜகவும் சேர்ந்துதான் ஊக்குவிக்கிறது என்று சிலரும் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications