"ராகுல் காந்தியை மதிக்கல.." ஆர்எஸ்எஸ் கீதத்தை பாடிய கர்நாடக துணை முதல்வர்! உடனே பாஜக சொன்ன பாயிண்ட்
பெங்களூர்: கர்நாடகாவில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில், அம்மாநிலத் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் அவையிலேயே ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடினார். காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கடுமையாக விமர்சித்து வரும் சூழலில், டிகே சிவக்குமார் ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கர்நாடகச் சட்டசபையில் இப்போது மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு முக்கியமான விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்தப்பட்டு, பல முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது. குறிப்பாகக் கடந்த ஜூன் மாதம் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் சிக்கி, பலரும் உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மழைக்காலக் கூட்டத்தொடர்
அதேபோல சட்டவிரோதச் சுரங்கம், சட்டவிரோதக் கட்டுமானம் ஆகியவற்றை தடுக்கும் வகையிலும் புதிய மசோதாக்களை கர்நாடக அரசு கொண்டு வந்தது. இப்படிப் பல முக்கிய விவாதங்களும் மசோதாக்களும் இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் நடந்தது. இன்று ஆகஸ்ட் 22ம் தேதியுடன் கர்நாடகச் சட்டசபை மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைகிறது.
இதற்கிடையே நேற்றைய தினம் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீதத்தைப் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பாராட்டிப் பேசியிருந்தார். அதைக் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக எதிர்த்த நிலையில், டிகே சிவக்குமார் திடீரென அவையிலேயே ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடினார்.
ஆர்எஸ்எஸ் கீதம்
இது தொடர்பாக 73 வினாடிகள் ஓடும் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டானது. அதில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் சட்டசபை வளாகத்தில் 'நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே' என்ற ஆர்.எஸ்.எஸ். கீதத்தைப் பாடுகிறார். ராகுல் காந்தி, கார்கே காங்கிரஸ் தலைவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கடுமையாக எதிர்த்து வரும் சூழலில், டிகே சிவக்குமார் ஆர்.எஸ்.எஸ். கீதத்தைப் பாடியிருக்கிறார்.
இதற்கிடையே பாஜகவும் டிகே சிவக்குமார் ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடும் வீடியோவை இணையத்தில் டிரெண்ட் செய்து வருகிறது. இது குறித்து பாஜகவின் தேசியச் செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, "நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே... நேற்று கர்நாடகச் சட்டசபையில் டி.கே. சிவக்குமார் ஆர்.எஸ்.எஸ். கீதத்தைப் பாடுவதைக் காண முடிந்தது. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா குடும்பத்தினர் இதைப் பார்த்தால் கோமாவுக்கு சென்றுவிடுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
பாஜக விமர்சனம்
காங்கிரஸில் நிலவும் உள் மோதல்களையே இது காட்டுவதாகவும், ராகுல் காந்தியை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என்பதையும் இது காட்டுவதாகவும் பண்டாரி கூறியிருக்கிறார். அவர் மேலும், "பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சுதந்திரப் போராட்டப் பங்களிப்பைப் பற்றிப் பேசிய பிறகு, காங்கிரஸ் தலைவர்களில் பெரும்பாலோர் இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் புகழ்கின்றனர். சசி தரூர் முதல் டி.கே. சிவக்குமார் வரை காங்கிரஸில் யாரும் ராகுலை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை!" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி
காங்கிரஸின் ராகுல் காந்தி தொடர்ச்சியாக ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சித்து வருகிறார். ஆர்எஸ்எஸ் எல்லா அமைப்புகளிலும் ஊடுருவி வருவதாகவும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அரசியல் சாசனம் தேவையில்லை.. மனுஸ்மிருதி தான் தேவை எனக் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். ஆனால், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான டிகே சிவக்குமார் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடியிருப்பது சலசலப்பை உருவாக்கியுள்ளது. இருப்பினும், இது தொடர்பாகக் காங்கிரஸ் இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை.












Click it and Unblock the Notifications