கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?
பெங்களூர்: கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த சஸ்பென்ஸிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் ஜூன் 3 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். பெங்களூரில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக டிகே சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்பது உறுதியாகி உள்ளது.
கர்நாடகாவின் 25வது முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்க உள்ளார். இதனையொட்டி, பெங்களூர் விதான் சவுதாவில் பதவியேற்பு விழாவுக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் தற்போதே களைகட்டத் தொடங்கியுள்ளன.

சுழற்சி முறைக்குக் கிடைத்த வெற்றி
கடந்த 2023 ஆம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோதே, மூத்த தலைவர் சித்தராமையா மற்றும் 'டிரபுள் ஷூட்டர்' என்று அழைக்கப்படும் டி.கே.சிவகுமார் இடையே முதல்வர் பதவிக்குக் கடும் போட்டி நிலவியது. அப்போது டெல்லி மேலிடம் தலையிட்டு, "2.5 ஆண்டுகள் சுழற்சி முறை" என்ற ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சித்தராமையாவை முதற்கட்டமாக முதல்வராக்கியது.
அந்த ஒப்பந்தத்தின்படியே, காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவை ஏற்று சித்தராமையா கடந்த வியாழக்கிழமை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஏற்றுக்கொண்டதை அடுத்து, புதிய ஆட்சி அமைப்பதற்கான கதவுகள் திறந்துள்ளன.
டெல்லி டூ பெங்களூர்: தீவிர ஆலோசனைகள்
பதவி மாற்றத்தை சுமூகமாக முடிக்க டெல்லியில் முகாமிட்டிருந்த சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவருமே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைத் தனித்தனியாக சந்தித்துப் பேசினர்.
தனக்கு இருமுறை முதல்வராக வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்த சித்தராமையா, அதே சமயம் தனது மகன் டாக்டர் யதீந்திராவிற்குப் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுத்தர டெல்லியில் காய் நகர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு
இன்று மாலை பெங்களூர் விதான சவுதாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அதிகாரப்பூர்வமாகக் கூடியது. இதில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் முன்னிலையில், டி.கே.சிவகுமார் ஒருமனதாகச் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டிகே சிவக்குமாரின் பெயரை முன்னாள் முதல்வர் சித்தராமையா முன்மொழிந்தார். இதையடுத்து உள்துறை அமைச்சராக இருந்த பரமேஸ்வர் வழிமொழிந்தார். அதன்பிறகு சட்டசபை காங்கிரஸ் குழு தலைவராக அந்த கட்சியின் எம்எல்ஏக்கள் டிகே சிவக்குமாரை தேர்வு செய்தனர். இதன்மூலம் டிகே சிவக்குமார் கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவியேற்பது உறுதியாகி உள்ளது.
டிகே சிவகுமாருக்கு சவால்
சித்தராமையா பதவியை விட்டுக்கொடுத்தாலும், அமைச்சரவை உருவாக்கத்தில் டி.கே.சிவகுமாருக்குப் பெரும் தலைவலி காத்துள்ளது. மூத்த எம்எல்ஏக்கள் பலரும் தங்களுக்குக் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது அமைச்சர் பதவி தர வேண்டும் என பிடிவாதம் பிடிக்கின்றனர். முந்தைய அமைச்சரவையில் இருந்தவர்களும் தங்களுக்கு மீண்டும் அதே முக்கியத்துவம் வேண்டும் என மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
துணை முதலமைச்சராக இருந்த சிவகுமார் முதல்வராவதால், அடுத்து தங்களுக்குப் பல செல்வாக்கு மிக்க சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களுக்குத் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
பதவியேற்பு எப்போது?
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவகுமார், "எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முறைப்படி தலைவர் தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஆளுநரைச் சந்தித்து ஆதரவுக் கடிதம் வழங்கப்படும். அதன்பின்னர், திங்கட்கிழமைக்குள் புதிய முதலமைச்சர் மற்றும் முதற்கட்ட அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.
சித்தராமையா என்ற மாபெரும் மக்கள் தலைவரின் நிழலில் இருந்து வெளிவந்து, கர்நாடகாவின் 'டாப் சீட்டில்' அமரப்போகும் டி.கே.சிவகுமார், இந்த உட்கட்சிப் பூசல்களை எப்படிக் கையாளப்போகிறார் என்பதைப் பொறுத்தே அவரது ஆட்சிப்பயணத்தின் வெற்றி அமையவுள்ளது.












Click it and Unblock the Notifications