பெங்களூரில் கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த நேபாள காதல் ஜோடி.. கழிவறை கோப்பையில் என்ன அது?
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள புறநகர் பகுதியான ராம்நகரில் தனியார் மருத்துவமனையில் கழிவறை கோப்பையில் பச்சிளம் குழந்தை உடல் மீட்கப்பட்ட வழக்கில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த நேபாள காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் ஆரோஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெங்களூர்-கனகபுரா சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் உள்ள கழிவறையில் கடந்த நவம்பர் 27ம் தேதி தண்ணீர் செல்லாமல் தேங்கி கிடந்துள்ளது. அதனை சுத்தம் செய்த போது உள்ள கழிவறை கோப்பையில் பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் கிடந்திருப்பதை அந்த தூய்மை பணியாளர் பார்த்தார். குழந்தையின் உடல் கழிவறையின் கோப்பையில் சிக்கி இருந்தது தெரியவந்தது. பிறந்த பச்சிளம் குழந்தையின் உடலை கழிவறைக்குள் கல்நெஞ்சம் கொண்ட தாய் போட்டு சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து ஆரோஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், பச்சிளம் குழந்தையை கழிவறைக்குள் வீசி கொன்றதாக நேபாளத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடியை போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
நேபாளத்தை சேர்ந்த 22 வயதாகும் சுரேந்திரா மேக்ரா என்பவர் ராமநகரில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். அங்கேயே அவர் தங்கியிருந்து வந்துள்ளார். சுரேந்திரா நேபாளத்தை சேர்ந்த அம்ருதா குமாரி (21) என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக தனது காதலியை நேபாளத்தில் இருந்து அவர் பெங்களூருக்கு அழைத்து வந்துள்ளார். 2 பேரும் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
இதனால் அம்ருதா குமாரி கர்ப்பம் அடைந்துள்ளார். இதுபற்றி 2 பேருக்கும் முதலில் தெரியாமல் இருந்திருக்கிறது. கடந்த மாதம் வயிற்று வலியால் அம்ருதா குமாரி அவதிப்பட்டுள்ளார். இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற போது தான், அவர் 8 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதற்காக உயர்தர ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறும்படி அம்ருதா குமாரி, நரேந்திரா ஆகியோரிடம் டாக்டர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
அதன்பேரில், கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி பெங்களூர்-கனகபுரா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து அம்ருதா குமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. கழிவறைக்கு சென்றிருந்த அம்ருதா குமாரிக்கு, அங்கு வைத்து ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தை உயிருடன் உள்ளதா? இறந்து விட்டதா? என்பது கூட கவனிக்காமல், உடனடியாக கழிவறை கோப்பைக்குள் குழந்தையை போட்டு விட்டு தண்ணீர் ஊற்றி இருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்த ரத்தத்தையும் தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு சுரேந்திரா மற்றும் அம்ருதா குமாரி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச் சென்றிருக்கிறார்கள். 2 நாட்கள் கழித்து கழிவறையில் அடைப்பு ஏற்பட்டு சுத்தம் செய்த போது தான் பச்சிளம் குழந்தையின் உடல் சிக்கியிருப்பதை தூய்மை பணியாளர் கண்டுபிடித்தார்
இதையடுத்து, குறிப்பிட்ட நாட்களில் யார் யார் வந்தார்கள் என்று மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது தான் சுரேந்திரா, அம்ருதா குமாரி ஆகிய 2 பேரும் சந்கேதத்திற்கு இடமான முறையில் வந்து சென்றது தெரியவந்தது. கர்ப்பிணியாக வந்த பெண்,குழந்தை இல்லாமல் திரும்பி சென்றது தெரியவந்தது. அதன்பேரில், 2 பேரையும் பிடித்து விசாரித்த போலீசார், அதன்பின்னர் உண்மையை கண்டுபிடித்து கைது செய்தனர். பெற்றோருக்கு தெரியாமல் நேபாளத்தில் இருந்து பெங்களூருவுக்கு ஓடிவந்து சுரேந்திரா, அம்ருதா குமாரி வசித்து வந்ததும் தெரிந்தது. விசாரணைக்கு பின்பு 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.












Click it and Unblock the Notifications