2 மணி நேர பிரேத பரிசோதனை.. போலீசிடம் சித்தார்த்தா மரணம் பற்றி ரிப்போர்ட் கொடுத்த மருத்துவர்கள்!
காபி டே நிறுவனர் சித்தார்த்தா மரணத்திற்கு பிறகு அவரது உடல் தற்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர்: காபி டே நிறுவனர் சித்தார்த்தா மரணத்திற்கு பிறகு அவரது உடல் தற்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை காணாமல் போன காபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தாவின் உடல் இன்று அதிகாலை போலீஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அரபிக்கடலில் மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் நேத்ராவதி நதி அருகே அவரின் உடலை கண்டுபிடித்தனர்.
இந்த மரணம் தற்போது காபி டே நிறுவனத்தை மட்டுமில்லாமல், அதன் மொத்த ஊழியர்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவரின் குடும்பத்தை இந்த மரணம் உலுக்கி உள்ளது.
என்ன செய்தனர்
இந்த நிலையில் சித்தார்த்தாவின் உடல் மங்களூரில் இருக்கும் வென்லாக் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் உடல் மொத்தம் 2 மணி நேரம் அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மூன்று அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
என்ன சோதனை
அவர் உண்மையில் தற்கொலை மூலம்தான் மரணம் அடைந்தாரா என்று பிரேத பரிசோதனையில் சோதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உடலில் அடிபட்ட காயங்கள் எங்கு இருக்கிறது என்றும் சோதனை செய்யப்பட்டுள்ளது. இவர் மருத்துவத்தில் மர்மம் நிலவ வாய்ப்புள்ளதால் உடலை மிக கவனமாக பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
அறிக்கை சமர்ப்பிப்பு
இந்த மரணம் குறித்த முழு பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. அதே சமயம், தற்போது பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை போலீசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. போலீசாரிடம் சீல் செய்யப்பட கவரில் வென்லாக் மருத்துவர்கள், இந்த அறிக்கையை அளித்தனர்.
அடக்கம்
அதன்பின் சித்தார்த்தாவின் உடல் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த இறுதிச்சடங்கில் முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.