சீரியசாகும் பெங்களூர் பந்த்- தமிழ்நாடு லாரிகள் எல்லையில் நிறுத்தம்! தாக்குதல் அச்சத்தால் முடிவு!
பெங்களூர்: காவிரி விவகாரம் தொடர்பாக நாளை கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதால், எல்லையிலேயே தமிழ்நாடு லாரிகள் நிறுத்தப்படும் என அம்மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று காவிரியில் தமிழ்நாட்டிற்கு 5,000 கன அடி நீர் திறக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாகவே கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து உள்ளன. விவசாயிகள் மட்டுமின்றி கன்னட அமைப்புகள், அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

கர்நாடக தலைநகர் பெங்களூர் தமிழ்நாடு எல்லையான அத்திபள்ளி, மண்டியா, கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர போராட்டங்கள் வெடித்து உள்ளன. இந்த நிலையில் நாளை பெங்களூர் நகரத்தில் பல்வேறு அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளன.
மறுபக்கம் கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரில் நாளை காலை 11 மணியளவில் டவுன் ஹால் பகுதியில் இருந்து மைசூர் பேங்க் வரை பேரணி நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கவும் விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள் வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள், வியாபாரிகள், தொழிற்சங்கங்கங்கள், மென்பொருள் நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தனர். மறுபக்கம் இந்த போராட்டத்துக்கு ஓலா, ஊபர் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளார்கள் சங்க தலைவர் தன்வீர் பாஷாவும் ஆதரவளிப்பதாக அறிவித்தார். எனவே நாளை ஓலா, ஊபர் டாக்சிகள் ஓடாது என்று கூறப்படுகிறது.
தலைநகர் பெங்களூரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு இந்த போராட்டங்களால் அச்சுறுத்தலான நிலை உள்ளது. இன்று தமிழ்நாட்டை சேர்ந்த லாரி மீது பெங்களூரு நைஸ் ரோடு பகுதியில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றமான நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் நாளை போராட்டம் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து செல்லும் லாரிகள் நாளை கர்நாடக எல்லையில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், தமிழ்நாடு நோக்கி கர்நாடகா வழியாக வட மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளும் நிறுத்தப்படும் என கர்நாடகா மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது.
கர்நாடகாவில் நாளை காவிரி விவகாரம் தொடர்பாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற இருப்பதால் பாதுகாப்பு கருதி எல்லையிலேயே நிறுத்தப்படும் என அந்த அமைப்பு அறிவித்து இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வழியாக பிற மாநிலங்களுக்கு செல்லும் சரக்கு போக்குவரத்து, மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கர்நாடகா வழியாக தமிழ்நாட்டுக்கு வரும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications