பெங்களூரில் மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளம்.. சேமிப்பு வெறும் ரூ.20 ஆயிரம்.. ஐடி ஊழியர் வெளியிட்ட பதிவு
பெங்களூர்: பெங்களூர் இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று போற்றப்படுகிறது. மிகப்பெரிய அளவில் சம்பளம் பெங்களூரில் ஐடி ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. சர்வ சாதாரணமாக பலர் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். 3 லட்சம் சம்பளம் எல்லாம் பெங்களூரில் பலர் வாங்குகிறார்கள்.. பெங்களூருவில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கம்ப்யூட்டர் மாதம் 1.50 லட்சம் சம்பளம் வாங்குகிறார். ஆனால் தனது சேமிப்பு வெறும் 20 ஆயிரம் தான் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களுர், சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் ஒரு லட்சம் சம்பளம் என்பது கோவை, மதுரை, கொச்சி போன்ற நகரங்களில் 50 முதல் 70 ஆயிரம் வாங்குவதற்கு சமம் என்பார்கள்.. அதற்கு காரணம் வீட்டு வாடகை.. சென்னை, பெங்களூரில் முக்கிய பகுதிகளில் வீட்டு வாடகை 30 ஆயிரம் , 40 ஆயிரம் என்று அசால்டாக இருக்கும். பள்ளிக்கட்டணம் ஒருவருக்கு 2 லட்சம் வரை சாதாரணமாக இருக்கும். காருக்கு பெட்ரோல், வெளியூர் சென்று வருவது, மாதம் இரண்டு முறை சொந்த ஊர் சென்று செலவு செய்து வருவது, அவசரமாக மருத்துவ செலவு, மின்சார செலவு, இஎம்ஐயில் வீட்டிற்கு வாங்கி போட்ட பொருட்களுக்கு கடன் கட்டுவது, கல்யாண கடன், வீட்டுக்கடன், கல்விக்கடன், வார இறுதிகளில் குடும்பத்தினருடன் செலவிடுவது என எல்லாம் கழித்து பார்த்தால் ஒன்றுமே மிஞ்சாது.

சென்னையில் எல்லாம் ஐடி ஊழியர்கள் மாத கடைசியில் கடன் அட்டையில் தேய்த்து, அண்ணா நகரிலோ, பள்ளிக்கரணையிலேயே புதிய பிரியாணி கடையில் போய் பிரியாணி வாங்கி தின்று மனதை தேற்றுவார்கள். அவர்கள் பழகிய வாழ்க்கை சூழலை விட்டுக்கொடுக்கவும் முடியாமல், அந்த ஸ்டேட்டஸ்களை விட்டு தரவும் முடியாமல் கடனிலேயே வாழ்வார்கள். அது பெங்களூரிலும் இருக்கிறது.
பெங்களூருவில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பொறியாளர் ஒருவர் பணியாற்றி வரும் ஒருவரின் மாத சம்பளம் ரூ.1½ லட்சம் ஆகும். இதில் தனது சேமிப்பு என்பது வெறும் ரூ.20 ஆயிரம் மட்டுமே என்று அந்த பொறியாளர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் கூறியுள்ளதாவது:
நான் பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். எனது மாத சம்பளம் ரூ.1½ லட்சம் ஆகும். இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் வீட்டு வாடகை ரூ.36 ஆயிரம், உணவு பொருட்கள் செலவு ரூ.15 ஆயிரம், வாடகை கார், ஆட்டோ செலவு ரூ.8 ஆயிரம், உணவு ஆர்டர் செய்வது, காபி, வார இறுதி நாட்களில் வெளியே செல்வதற்கான செலவு ரூ.12 ஆயிரம். இவை தவிர பிற செலவுகளை யாரும் கணக்கில் கொள்வது இல்லை.
அதாவது, மருத்துவ செலவுகள், எதிர்பாராத செலவுகள், வீட்டுக்கு பணம் அனுப்ப வேண்டும். இவை எல்லா செலவுகளும் போக மாத சம்பளத்தில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் மட்டுமே மிச்சமாகிறது. சிறிய நகரங்களில் வசிப்பவர்கள் இதுபற்றி யோசிப்பது இல்லை. சிறிய நகரங்களில் இருப்பவர்கள், மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கினாலே பெரியதாக பேசுகிறார்கள். ஆனால் பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் ரூ.1 லட்சம் வாங்கினால் அப்போதுதான் வாழ்க்கையை தொடங்குவதாக அர்த்தம். அதனால் அதிக சம்பளம் பெற்று குறைவாக சேமிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் பெங்களூருவுக்கு வாருங்கள்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications