Ranya Rao: தங்க கடத்தலில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பா? நடிகை ரன்யாவுக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா?
பெங்களூர்: துபாயில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்திய வழக்கில் நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை விசாரித்த பெங்களூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்குகிறது. மேலும் இந்த கடத்தலில் அரசியால்வாதிகளுக்கு தொடர்பிருக்கிறதா என்பதை விசாரிக்க அமலாக்கத் துறை அவரை காவலில் எடுப்பது குறித்தும் இன்று தெரியவரும்.
தமிழ், கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடித்தவர் நடிகை ரன்யா ராவ். இவர்
கர்நாடகா போலீஸ் குடியிருப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக ஏடிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகள் என்கிறார்கள். இவர் கடந்த மார்ச் 3 ஆம் தேதி துபாயில் இருந்து பெங்களூர் வந்த விமானத்தில் 14.8 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவரது நடவடிக்கை மீது சந்தேகமடைந்த சுங்கத் துறை அதிகாரிகள், இவரை சோதனை செய்த போது தொடையில் தங்க கட்டிகளை ஒட்டிக் கொண்டு கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பெங்களூரில் லாவெல்லி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள இவரது வீட்டில் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அதில் 2.06 கோடி ரூபாய் தங்க நகைகள், ரூ 2.67 கோடி ரொக்கம் உள்ளிட்டவை சிக்கின.
ரன்யா ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல்வேறு திடுக் தகவல்களை தெரிவித்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரன்யாவுக்கு ஆடம்பரமாக திருமணம் நடந்ததாம். அவருடைய கணவர் கட்டட வடிவமைப்பாளர், பிரபல அரசியல்வாதியின் உறவினராம்.
தங்கம் கடத்தலில் ரன்யா ராவுக்கு நேரடி தொடர்பு இல்லையாம். அவர் குருவி போல் செயல்பட்டுள்ளார். அதாவது நகைகளை கடத்தி கொடுத்தால் ரன்யாவுக்கு கமிஷன் கிடைத்ததாம். ஒரு கிலோவுக்கு ரூ 5 லட்சம் கமிஷன் பேசப்பட்டதாம்.
பெங்களூரில் இருந்து துபாய்க்கு செல்லவும் எந்த ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும், எப்போது பெங்களூர் திரும்ப வேண்டும் என்பதையெல்லாம் அவருக்கு கடத்தல் கும்பல் தெரிவிக்குமாம். கடத்தலின் போது யாரையும் ரன்யா பார்த்ததில்லையாம். துபாய் விமான நிலையத்தில் உட்கார்ந்திருப்பாராம். அப்போது அவருக்கு ஏதோ ஒரு சமிக்ஞை கிடைக்குமாம்.
அதன்பிறகு கழிப்பறைக்குச் சென்றால் அங்கு தங்க பிஸ்கெட் இருக்குமாம். அதில் பசை தடவி தொடையில் ஒட்டிக் கொண்டு பெங்களூர் விமானத்தில் ஏறி வருவாராம். துபாயில் இருந்து பெங்களூர் வரும் போதெல்லாம் ஒரே மாதிரியான உடையையே அணிந்திருந்தாராம்.
பெங்களூர் விமான நிலையத்தில் அவரை சோதனை செய்ய முற்பட்டால், தான் ஏடிஜிபியின் மகள் என கூறிவிடுவாராம். இதனால் அதிகாரிகளும் இவரை சோதனை செய்யாமல் அனுப்பினராம். இப்படியே இவர் இத்தனை முறை தங்கம் கடத்தலில் ஈடுபட்டு தப்பியது தெரியவந்தது.
இதனிடையே நடிகை ரன்யா ராவ் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரன்யாவுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் 4 நாட்கள் காவலில் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கு ரன்யாவின் வழக்கறிஞர் மறுத்துள்ளாராம். ரன்யாவிடம் ஏற்கெனவே விசாரணை நடந்துவிட்டதால் இனி விசாரிக்க எதுவும் இல்லை என்பதால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கூடாது என வாதிட்டாராம்.
ஆனால் இந்த ஆண்டில் மட்டும் ரன்யா 8 முறை துபாய்க்கு பறந்துள்ளார். அவர் எப்படி விமான நிலைய கட்டுப்பாடுகளை மீறினார் என்பது குறித்தும் அவர் இத்தனை முறை சிக்காமல் கடந்த 3 ஆம் தேதி மட்டும் சிக்கியது எப்படி என்பது குறித்தும் இந்த கடத்தலில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்த அமலாக்கத் துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது. இதனால் இன்று ரன்யாவுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications