தொடர்ந்து ‛டிமிக்கி’.. பைஜூஸ் நிறுவனத்தின் சிஇஓ வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை..
பெங்களூர்: வெளிநாடு நேரடி முதலீடு தொடர்பான முறைகேடு புகாரில் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்த பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பைஜூ ரவீந்திரனின் வீடு, அலுவலகத்தில் இன்று அதிரடியாக நுழைந்து அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்தியாவில் கல்வி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக பைஜூஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கர்நாடகா தலைநகர் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) பைஜூ ரவீந்திரன் உள்ளார்.

இந்நிலையில் தான் பைஜூ நிறுவனம் வெளிநாட்டு நிதிகளை நிர்வகிப்பதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான தனிநபர்கள் பல்வேறு புகார்களை முன்வைத்தனர்.
அதாவது பைஜூஸ் நிறுவனம் 2011ல் தொடங்கப்பட்ட நிலையில் அன்று முதல் 2023ம் ஆண்டு காலக்கட்டத்தில் வெளிநாடு நேரடி முதலீடு மூலம் ரூ.28 ஆயிரம் கோடி வரை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் பல்வேறு அதிகார வரம்புக்கு உட்பட்டு வெவ்வேறு வகைகளில் 9,754 கோடி வரை வெளிநாடுகளுக்கு செலவு எனும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் வெளிநாடு நேரடி முதலீட்டு விவகாரத்தில் விதிமீறல் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி பைஜூஸ் தலைமை செயல் அதிகாரி பைஜூ ரவீந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் முறைப்படி ஆஜராகவில்லை. அமலாக்கத்துறை சம்மனை அவர் புறக்கணித்தார். இதனால் அவர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் இன்று பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பைஜூ ரவீந்திரனின் பெங்களூர் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். பெங்களூரில் உள்ள அவரது 2 வீடு மற்றும் ஒரு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் டேட்டாக்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது எடுக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications