இது ஓகேவா..? மும்பையிலிருந்து சபாநாயகருக்கு ஸ்பீட் போஸ்ட்டில் வந்த எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம்
பெங்களூர்: காங்கிரசின் 11 எம்எல்ஏக்கள் மற்றும் மஜதவின் 3 எம்எல்ஏக்கள் என மொத்தம் 14 எம்எல்ஏக்கள் வழங்கிய ராஜினாமா கடிதங்களில் 9 பேரின் கடிதங்கள் செல்லாது என கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் நேற்று அறிவித்தார்.
இதையடுத்து மும்பை ஓட்டலில் உள்ள எம்எல்ஏக்களில் 8 பேர் ஸ்பீட் போஸ்ட் மூலம் மீண்டும், சபாநாயகருக்கு ராஜினாமா கடிதங்களை இன்று அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், நேரில் வந்து ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டும் என்பதே சபாநாயகர் பரிந்துரை என்பதால், இந்த கடிதங்களும் ஏற்கப்படுமா என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் கூறுகையில், "எதிர்க்கட்சிக்கு ஜனநாயகத்தில் இடம் கொடுக்கப்பட வேண்டும். எம்.எல்.ஏ.க்களை சந்திக்க எங்கள் அமைச்சர் செல்லும்போது, அவரை அனுமதிக்கப்படவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை" என்றார்.
அதிகாரத்தை கைப்பற்ற கர்நாடகாவில் ஜனநாயகத்தை அகற்ற பாஜக முயற்சிக்கிறது என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டினார்.
ஆளுநர் மாளிகை முற்றுகை.. காங்கிரஸ், மஜத தலைவர்கள் ஆவேசம்.. தள்ளாத வயதிலும் களம் வந்த தேவகவுடா
"மகாராஷ்டிராவில் ராணுவச் சட்டம் உள்ளது. கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் ஹோட்டலுக்குச் சென்றார், ஏற்கனவே அவர் அறை முன்பதிவு செய்தார் ... அவர் காரில் இருந்து இறங்கியபோதே, போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினர். நீங்கள் ஒரு அமைச்சரை எவ்வாறு தடுத்து நிறுத்த முடியும்?" என்றார் அவர்.
அரசியல் நெருக்கடியைத் தீர்க்க, காங்கிரசுக்கு உதவ கர்நாடகாவிற்கு வந்து உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், கூறுகையில், "ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. காங்கிரஸ் மற்றும் மஜத இன்று தர்ணா நடத்தும்" என்றார்.