EXCLUSIVE: உயிர்பெறுமா சந்திரயான் 3?.. அந்த நொடி என்ன நடக்கும்? விஞ்ஞானி சொன்ன பரபரப்பு தகவல்
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தில் பத்திரமாக தரையிறங்கி ஆய்வை மேற்கொண்டு உறக்க நிலைக்கு சென்றுள்ள சந்திரயான் 3 பிரக்யான் ரோவரை உயிர்ப்பிக்கும் பணிகள் இன்று தொடங்குகின்றன. இது குறித்த பிரத்தியேக தகவல்களை மத்திய அரசின் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் ஒன்இந்தியா தமிழுடன் பகிர்ந்துள்ளார்.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. 312 நாட்களாக நிலவை 3,400 சுற்றுகளை சுற்றிய பின்னர்தான் இதை சந்திரயான் 1 உறுதி செய்தது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
திட்டமிட்டபடி தனது வேலையை முடித்துக்கொண்ட பிரக்யான் ரோவர், தற்போது உறக்க நிலையில் இருக்கிறது. இதனை மீண்டும் எழுப்ப இன்று முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசின் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார். இதில் இருக்கும் சவால்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, "நிலவில் இரவு நேரங்களில் மைனஸ் 175 டிகிரி செல்ஸியல் குளிர் இருக்கும். எனவே அந்த குளிரில் ரோவரின் கருவிகள் மீண்டும் செயல்படுமா என்பது சந்தேகம்தான்.
நிலவை பொறுத்த அளவில் பகலில் 175 டிகிரி செல்ஸியல் வெப்பம் பதிவாகி இருக்கும். இது கொதிநிலையை விட அதிகம். இருப்பினும் இந்த வெப்பத்திலிருந்து ரோவரின் கருவிகளை பாதுகாக்க சில வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால், குளிரிலிருந்து ரோவரை காக்க நாம் எதையும் செய்யவில்லை. இன்றுடன் நிலவில் இரவு காலம் முடிவடைகிறது. காலை 10 மணிக்கு மேல் நிலவின் தென் துருவ பகுதியில் சூரியன் உதிக்க தொடங்கும். இது நடுவானில் வராது. தென் துருவம் என்பதால் 9 டிகிரி கோணத்தில் மட்டுமே உதித்து அப்படியே பயணிக்கும். எனவே இதற்கேற்றார் போல் ரோவரில் சூரிய ஒளி தகடுகளும் சாய்வாகவே பொருத்தப்பட்டுள்ளன.
எனவே இன்று காலையிலிருந்தே பிரக்யான் ரோவரை எழுப்பும் பணிகள் தொடங்கி விடும். இந்த பணி செப்.22ம் தேதி வரை நீடிக்கும். 22ம் தேதி ரோவரை எழுப்ப முடியவில்லை எனில் இனி எப்போதுமே அதை எழுப்ப முடியாது. இதற்கான நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் சந்திரயான் 3 திட்டத்தின் நோக்கத்தை பிரக்யான் ரோவர் முழுமையாக நிறைவு செய்துள்ளது" என்று ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications